எ.வ. வேலு இடங்களில் ரெய்டு.. பின்னணியில் 'அந்த' ஆடியோவா? திமுக தலைமை 'ஷாக்'
திருவண்ணாமலை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் இந்த சூழலில், திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சூழலில், பின்னணியில் ஒரு முக்கிய ஆடியோ இருப்பதாக முணுமுணுக்கப்படுகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் இன்று வேட்பாளர் எ.வ.வேலுவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதே நேரத்தில், அவருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
முக்கிய காரணம்
குறிப்பாக, திருவண்ணாமலையில் உள்ள வேலுவுக்கு சொந்தமான கல்லூரி விடுதியில் நேற்று இரவு முழுவதும் மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த நிலையில், அதே கல்லூரியில் அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை நடத்தி வருவது திமுக தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், இந்த பின்னணியில் ஆடியோ ஒன்று முக்கிய காரணமாக உள்ளதாக முணுமுணுக்கப்படுகிறது.
6 ஆயிரம் ஏக்கர் நிலம்
திருவண்ணாமலை (தெற்கு) திமுக நிர்வாகி ஒருவர், தனது கட்சி பிரமுகருடன் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த ஆடியோவில், "கம்பன் அப்பா (எ.வ.வேலு), 8 கல்வி நிறுவனங்கள் வைத்துள்ளார். தமிழகத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலம், ஸ்பின்னிங் மில், கிரானைட் கம்பெனி உள்ளது. மெடிக்கல் காலேஜ் கட்டுகிறார். கரூரில் 500 கோடி ரூபாய் பைனான்ஸ் விட்டுள்ளார். ஒரு முறை அமைச்சராக இருந்துள்ளார். 6 முறை எம்எல்ஏவாக உள்ளார். 20 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக உள்ளார்.
பெரும் அதிர்வலை
ரத்தத்தை சிந்தி கட்சியை வளர்த்தவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வரவில்லை. எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர், அமைச்சராக இருந்த எ.வ.வேலுவுக்கும், அவரது வாரிசுக்கும் எப்போதும் பணி விடை செய்ய வேண்டுமா? நாங்கள் எல்லாம் அடிமை என எழுதிக் கொடுத்து விட்டோமா?" என்று பேசியது போன்று வெளியான ஆடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சினிமாவில் சம்பாதித்தது
இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, "என் குடும்பத்தாருக்கு ஒரு பள்ளிக்கூடம், ஒரு பாலிடெக்னிக், ஒரு மகளிர் கல்லூரி, ஒரு ஆடவர் கல்லூரி, ஒரு பொறியியல் கல்லூரி உள்ளன. இவை அனைத்தும், நான் திரைப்படங்கள் மூலமாக, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, திமுகவில் இணைவதற்கு முன்பாகவே சம்பாதித்த பணத்தைக் கொண்டு அறக்கட்டளை மூலமாக உருவாக்கப்பட்டவை.
கடன் வாங்கியுள்ளேன்
எனக்கு தமிழகத்தில் நூற்பாலை இல்லை, 6 ஆயிரம் ஏக்கர் நிலம் இல்லை. ரூ.500 கோடியில் பைனான்ஸ் செய்வதாக சொல்லப்படுகிறது. 50 கோடி ரூபாயில் கூட பைனான்ஸ் இல்லை. வருமான வரித்துறையிடம், நான் கணக்கு காட்டியதில் இருந்து, ஒரு சென்ட் இடம் அல்லது பணமோ என்னிடமும், எனது குடும்பத்திடமும் இல்லை. எனது பொது வாழ்வில் நான் அப்பழுக்கற்ற, நேர்மையாக மக்கள் தொண்டு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பணியாற்றுகிறேன். என் மீது தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நான் யார் மீதும் குற்றச்சாட்டை சொல்ல விரும்பவில்லை. சமூகவலைதளத்தில் வரும் தகவலை நான் மறுக்கிறேன். திருவண்ணாமலையில் எங்களது அறக்கட்டளை மூலமாக ஒரு வங்கியில் ரூ.130 கோடி கடன் பெற்று மருத்துவமனையை கட்டி வருகிறேன். சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை" என்று நீண்ட நெடிய மறுப்பு தெரிவித்திருந்தார்.
அதுவும் காரணமோ?
இந்த நிலையில் தான், எ.வ.வேலு வுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. திருவண்ணாமலையில் மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள எ.வ.வேலுவின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பணப்பட்டுவாடா புகார் ஒருபக்கம் இருந்தாலும், இந்த சோதனையின் அடிப்படையில் 'அந்த ஆடியோ' விவகாரமும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.