பெண் இறந்துட்டாங்க.. முத்துப்பேட்டை மருத்துவரிடம் பணம் பறிப்பு! பாஜகவினர் கைது - கடைசியில் டுவிஸ்ட்
திருவாரூர்: முத்துப்பேட்டை அருகே நோயாளி இறந்துவிட்டதாக கூறி மருத்துவரிடம் ரூ.2 லட்சம் பணம் பறித்துவிட்டு மேலும் ஒரு லட்சம் பணம் கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்து உள்ளார்கள்.
முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் முகமது அப்துல் காதர். ஹோமியோபதி மருத்துவராக இருக்கும் இவரிடம் கடந்த 29ஆம் தேதி தில்லைவிளாகம் பகுதியை சேர்ந்த பாலசுந்தரி
(வயது 40) என்பவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.
இந்த பெண்ணின் உறவினரான சித்தமல்லி பகுதியை சேர்ந்த வீரசேகரன் (வயது 42) பாஜக உறுப்பினராக உள்ளார். அதே சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் முகேஷ் (வயது 27) பாஜக கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.

மருத்துவரிடம் பாஜகவினர் மிரட்டல்
பாஜகவை சேர்ந்த இருவரும் மருத்துவர் அப்துல் காதரிடம் சென்று தங்களிடம் சிகிச்சை பெற்று சென்ற பெண் பாலசுந்தரி திடீரென உயிரிழந்து விட்டதாக கூறி இருக்கின்றனர். உயிரிழந்த பெண்ணின் மரணத்திற்கு நீங்கள்தான் காரணம் என போலீசாரிடம் புகாரளித்து வழக்கு தொடரப்போவதாகவும் அவர்கள் மிரட்டி உள்ளனர்.

பணம் கேட்டு மிரட்டல்
தங்களுக்கு ரூ.3 லட்சம் ரூபாய் கொடுத்தால் இந்த பிரச்சனையை சரி செய்துவிடுகிறோம் என பாஜக நிர்வாகிகள் இருவரும் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர் அப்துல் காதர் செய்வதறியாது, அவர்கள் சொன்ன புகாரை உண்மை என்று நம்பி, யாரிடமும் விசாரிக்காமல் 2 லட்ச ரூபாயை வழங்கி இருக்கிறார்.

விசாரித்த மருத்துவர்
அதனை பெற்றுக்கொண்ட பாஜகவினர், மேலும் ஒரு லட்ச ரூபாயை தங்களிடம் வழங்க வேண்டும் என கூறி மிரட்டல் விடுத்து சென்று இருக்கின்றனர். இந்த நிலையில் மருத்துவர் அப்துல் காதர் தன்னிடம் சிகிச்சை பெற்று இறந்ததாக கூறப்பட்ட பெண் பாலசுந்தரி குறித்து அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்து உள்ளார்.

இங்கதான் டுவிஸ்ட்
அப்போது பாலசுந்தரி உயிரிழக்கவில்லை என்றும், அவர் நலமாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஹோமியோபதி மருத்துவர் முகமது அப்துல் காதர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதனை தொடர்ந்து தன்னை நூதன முறையில் ஏமாற்றிய பாஜகவினர் மீது முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்.

கூட்டு மோசடி
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போதுதான் பாஜகவை சேர்ந்த இருவருடன் பெண் பாலசுந்தரியும் சேர்ந்து நோயாளிபோல் நாடகமாடி மருத்துவரை கூட்டு சேர்ந்து ஏமாற்றியது தெரியவந்து இருக்கிறது. ஆளுக்கு தலா ரூ.1 லட்சம் பிரித்துக்கொள்ளவே மருத்துவரிடம் ரூ.3 லட்சம் கேட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கைது
மருத்துவரிடம் நாடகமாடி நூதன மோசடியில் ஈடுபட்டதை பாஜக நிர்வாகிகள் மூன்று பேரும் முத்துப்பேட்டை போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து பாஜக நிர்வாகிகள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்றாவது குற்றவாளியான பாலசுந்தரியையும் இந்த வழக்கில் சேர்த்த காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரும் பரபரப்பு
மருத்துவரிடம் சிகிச்சை பார்க்க வந்த நோயாளி உயிரோடு இருக்கும்போதே சிகிச்சை பலனின்றி இறந்ததாக கூறி மருத்துவரை மிரட்டி பணம் பறித்த பாஜக ஒன்றிய செயலாளர் மற்றும் பாஜக பொருப்பாளரை போலீசார் கைது செய்து இருக்கும் சம்பவம் முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications