நீங்க வெறும் அண்ணாமலை.. ஆனால் நாங்க எரிமலை..எரிமலை! கிட்டவே வரக் கூடாது! தெறிக்க விட்ட ‘ஆசிரியர்’.!
திருவாரூர் : பாஜக தலைவர் அண்ணாமலை நீங்கள் பெயரில் அண்ணாமலையாக இருக்கலாம் நாங்கள் கொள்கையில் எரிமலை. எரிமலை பக்கத்தில் நீங்கள் வரக்கூடாது என திருவாரூரில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் திக தலைவர் வீரமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருவாரூர் தெற்கு வீதியில் திராவிடர் கழகம் நடத்திய சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க மாபெரும் மாநாடு திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.
இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சனாதன எதிர்ப்பு
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் சிபிஐ தலைவர் முத்தரசன் பேசும் போது," நம்முடைய அரசியலமைப்பு சட்டம் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். தனது சொந்தக் கொள்கையை பகிரங்கமாக சொல்லாத ஒரு கேடுகெட்ட அமைப்பு இருக்கிறது என்றால் அது ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக தான்.ஏன் பகிரங்கமாக சொல்ல அச்சப்படுகிறீர்கள்..? என்று கேள்வி எழுப்பினார்

கி.வீரமணி
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமு கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்டோர் பாஜக, அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோரை மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார். நிகழ்ச்சியில் இறுதியாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில்," தமிழக நிதி அமைச்சரை செருப்போடு ஒப்பிட்டு பேசியிருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலை
நீ பெயரில் அண்ணாமலையாக இருக்கலாம். நாங்கள் கொள்கையில் எரிமலை. நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். எரிமலை பக்கத்தில் நீங்கள் வரக்கூடாது. உங்களுக்கு கிடைத்திருக்கும் பாஜக தலைவர் பதவியே திராவிட இயக்கத்தால் திராவிட இயக்கத்தின் எதிரொலியால் கிடைத்த பதவி தான். ஆட்சிக்கு வந்தவுடன் பெண் போலீசை உருவாக்கியது தலைவர் கலைஞர் ஆட்சிதான்.

திராவிட மாடல்
அதுதான் திராவிட மாடல். பெண்களுக்கு துணிச்சலை பெற்று தந்தது தான் திராவிட மாடல். இந்த தெற்கு வீதிக்கு கலைஞர் பெயர் சூட்டப்பட வேண்டும். இந்த விஷயம் கட்சிக்கு அப்பாற்பட்ட விஷயம். ஓடாத தேரை ஓட வைத்ததே தலைவர் கலைஞர் தான். தேர் ஓடக்கூடாது என்று சண்டை போட்டது திகவினராக நாங்கள் தான். ஆனால் மக்களுக்காக தேரை ஓட வைத்தது தலைவர் கலைஞர் தான்" என்றார்.












Click it and Unblock the Notifications