நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டை.. ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல்.. அமைச்சர் சக்கரபாணி உத்தரவு!
ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர்: காலம் தவறி பெய்த கனமழை காரணமாக விவசாயிகள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாளொன்றுக்கு 1,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில், கடந்த பிப்.1ம் தேதி முதல் பிப்.3ம் தேதி வரை திடீர் கனமழை பெய்தது. பருவம் தவறி பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தது.
இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதையடுத்து,பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமமும், கொள்முதலில் நெல் ஈரப்பதத்தினை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
கை நிறைய சம்பளம்.. அப்பார்ட்மென்ட் வீடு! ஆனால் ஐடி ஊழியர் நிகழ்த்திய கொடூரம்.. 13 பெண்கள் பாதிப்பு
விவசாயிகள் பாதிப்பு
இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். இதனை நேரடியாக ஆய்வு செய்ய, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உணவு, வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அடங்கிய குழுவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.
அமைச்சர்கள் ஆய்வு
இதன் பின்னர் இன்று உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புத்தூர் கிராமத்தில், அறுவடைக்கு தயாரான நிலையில், மழைநீரில் சாய்ந்த நெற்பயிர்களை பார்வையிட்டார். அவரிடம் விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களை காண்பித்தனர். இதையடுத்து, உக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
சக்கரபாணி உத்தரவு
இதன்பின்னர் மன்னார்குடி பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், காலம் தவறி பெய்த கனமழையால் விவசாயிகள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளனர். நெல் ஈரப்பதம் 19 சதவிகிதமாக இருந்தாலும் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயிரம் மூட்டைகள் கொள்முதல்
அதுமட்டுமல்லாமல் ஞாயிறுக்கிழமைகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் நெல் அதிகமுள்ள நேரடி கொள்முதல் நிலையங்களின் அருகே மற்றொரு கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 1,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய உத்தரவிட்டிருக்கிறோம். அதேபோல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.