திருவாரூர் இடைத் தேர்தல்.. மு.க.அழகிரி முக்கிய முடிவு? திமுகவிற்கு காத்திருக்கும் சவால்
சென்னை: திருவாரூர் சட்டசபைத் தேர்தலில் மு.க.அழகிரி திமுகவினருக்கு ஷாக் கொடுக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் திமுக, அதிமுக, சசிகலா தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளும் தேர்தலில் களமிறங்குவது ஏறத்தாழ உறுதியாகிவிட்ட நிலையில் தான் அழகிரி மீது அரசியல் பார்வையாளர்களின் பார்வை சென்றுள்ளது.
திமுகவில் அழகிரி
கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திமுகவில் தனக்கு ஒரு நல்ல இடம் வேண்டும் என்று வலியுறுத்தினார் அழகிரி. ஆனால் கருணாநிதி காலத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியை மீண்டும் சேர்த்துக்கொள்ள ஸ்டாலின் சம்மதிக்கவில்லை. இதையடுத்து கருணாநிதி நினைவிடத்தை நோக்கி மாபெரும் அமைதி ஊர்வலம் நடத்தப்படும் என்று அழகிரி அறிவித்தார். அவர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு கூட்டம் சேர்ந்தது. இந்த பேரணியுடன் அழகிரி கப்சிப் என்று வீட்டிலேயே அமர்ந்து விட்டார்.
ஓங்கும் ஸ்டாலின் கை
ஸ்டாலினோ, திமுக அதிருப்தி தலைவர்களை மட்டுமின்றி எதிர்க்கட்சியினரையும் திமுக பக்கம் ஈர்க்க தொடங்கியுள்ளார். அதில் முக்கியமானவர் செந்தில் பாலாஜி. இப்படியாக திமுகவில் ஸ்டாலின் கை ஓங்கி விட்ட நிலையில், அழகிரி திமுகவிற்கு வருவதற்கு இருக்கும் எஞ்சிய ஒரே சான்ஸ் திருவாரூர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுவது மட்டுமே.
திமுக ஆதரவு
திருவாரூர் மாவட்டம் அதிலும் குறிப்பாக திருவாரூர் தொகுதி என்பது பாரம்பரியமாக திமுக-விற்கு வாக்களிக்கக் கூடிய மக்களைக் கொண்டது. இந்த நிலையில் அழகிரி சுயேட்சையாகவோ அல்லது வேறு ஏதேனும் சிறிய கட்சியில் சேர்ந்து அதன் மூலமாக போட்டியிட நேர்ந்தால், திமுக வாக்குகள் பிரியக் கூடும் என்று சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். திமுகவுக்கு செல்லக்கூடிய வாழ்க்கைகள் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கும், கருணாநிதியின் மகன் என்று அனுதாபத்தால் அழகிரிக்கும் தனித்தனியாக பிரியக் கூடும். இது தினகரன் கட்சிக்கோ அல்லது அதிமுகவுக்கு சாதகமாக முடியும் என்று சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
ஓட்டுகள்
இப்படியாக வாக்குகள் சரிசமமாக பிரிந்தால் திமுக வேட்பாளர் தோல்வி அடையக் கூடும். இது அழகிரி, திமுகவில் இருப்பது அவசியம் என்ற கருத்தை வலுப்பெறச் செய்து ஸ்டாலின் மனதைக் கரைத்து, மீண்டும் அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள தூண்டக் கூடும் என்று அழகிரி ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.
அழகிரிக்கு ஒரே வாய்ப்பு
இதுகுறித்து திருவாரூர் பகுதி மக்கள் சிலரிடம் பேசியபோது, அழகிரியை பொறுத்தளவில் கருணாநிதி உயிரோடு இருந்தபோதே அவரால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். எனவே அவர் மீது பெரும்பான்மையான மக்களுக்கு அனுதாபம் கிடையாது. எங்களைப் பொறுத்த அளவில் திமுக என்றால் ஸ்டாலின் மட்டுமே. உதயசூரியன் சின்னம் மட்டுமே, என்று தெரிவிக்கின்றனர். திமுகவில் மீண்டும் இணைவதற்கு வேறு வழியில்லாத சூழ்நிலையில், திருவாரூர் சட்டசபை தொகுதியில் சென்டிமென்டாக அழகிரி களமிறங்க வாய்ப்பு இருப்பதாகவே இப்போதுவரை வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தல் வெற்றி பார்முலாவில் வல்லவரான அழகிரிக்கும் இதைவிட்டால் வேறு வழியில்லை. பொருத்திருந்து பார்க்கலாம்.