நவ.14-ல் அமித்ஷா கூட்டும் தென் மண்டல கவுன்சில் கூட்டம்- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா?
திருப்பதி: தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14-ந் தேதி ஆந்திரா மாநிலம் திருப்பதி நகரில் கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதாக ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ள நிலையில் தமிழகம், கேரளா மற்றும் தெலுங்கானா மாநில முதல்வர்கள் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இதனால் இம்மூன்று மாநில முதல்வர்களும் அமித்ஷா கூட்டும் கூட்டத்தில் பங்கேற்பார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
29-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இக்கூட்டம் நடைபெறவில்லை.
கடந்த 2016-ம் ஆண்டு திருவனந்தபுரத்திலும் 2018-ம் ஆண்டு பெங்களூருவிலும் இக்கூட்டங்கள் நடைபெற்றன. தற்போது வரும் 14-ந் தேதி தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை திருப்பதியில் கூட்டியுள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா.
தமிழகத்தில் அனைத்து இடஒதுக்கீடுகளுக்கே ஆபத்து வந்துவிட்டது... டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை
பிரமாண்டமான ஏற்பாடுகள்
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க தென்மாநிலங்களின் முதல்வர்கள், தலைமை செயலாளர்கள், முதல்வர்களின் ஆலோசகர்கள் ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தமான் நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகியவற்றின் துணை நிலை ஆளுந்நர்கள் சிறப்பு விருந்தினர்களாக இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்துக்காக ஏற்பாடுகளை ஆந்திரா அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.
ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்பு
இக்கூட்டத்தில் தாம் பங்கேற்க உள்ளதாக ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கானா மாநில பிரிவினையின் போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற மத்திய அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்; சென்னைக்கு குடிநீர் வழங்கும் தெலுங்கு கங்கை திட்டத்துக்கான நிலுவை நிதி உதவியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்சனைகளை இக்கூட்டத்தில் முன்வைக்க இருப்பதாக ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
சந்திரசேகர ராவ் பங்கேற்பாரா?
அதே நேரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த கூட்டத்தில் பங்கேற்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த 2016,2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் கூட்டங்களில் சந்திரசேகர ராவ் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதில் அமைச்சர்கள்தான் பங்கேற்றனர். தற்போதைய கூட்டத்திலும் அதே பாணியில் அமைச்சர்களையே சந்திரசேகர ராவ் அனுப்பி வைப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின்?
மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அமித்ஷாவின் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்களா? என்பதும் உறுதியாகவில்லை. மு.க.ஸ்டாலினும் பினராயி விஜயனும் மத்திய பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரையில் கொள்கை ரீதியாக மத்திய அரசை எதிர்த்து கொண்டாலும் நிர்வாக ரீதியாக இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்கிற அணுகுமுறையை பின்பற்றுவதாகவே கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அமித்ஷா கூட்டிய கூட்டத்தில் பங்கேற்காமல் போவதன் மூலம் அதிமுக- பாஜகவினர் அதை அரசியலாக்கி சர்ச்சைக்கு இடம்தருவதையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பமாட்டார் எனவும் கூறப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் பங்கேற்பு?
ஆகையால் அமித்ஷா கூட்டுகிற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன், அமித்ஷாவின் கூட்டத்தில் பங்கேற்றாலும் மத்திய அரசின் திட்டங்கள், அணுகுமுறைகளை விமர்சிக்கக் கூடும் எனவும் தெரிகிறது.