திருப்பூர் விடுதியில் 3 சிறுவர்கள் பலியான சம்பவம்.. விசாரிக்க 3 குழுக்கள் அமைப்பு
திருப்பூர்: திருப்பூரில் விவேகானந்தா சேவாலயா கெட்டு போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே விவேகானந்தா சேவாலயம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதி இயங்கி வருகிறது. இங்குள்ள சிறுவர்களுக்கு இன்று காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
அந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 3 சிறுவர்கள் பலியாகிவிட்டனர். மேலும் 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேரில் வினித் ஐஏஎஸ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அது போல் திருப்பூர் மாவட்ட காவல் துறை ஆணையர் பிரபாகரனும் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு 3 குழுக்களை அமைத்துள்ளது.
திருப்பூர் விடுதியில் நேற்று காலை டிஃபனால் அனைத்து சிறுவர்களுக்கும் காய்ச்சல்! காவல் துறை பகீர்
சமூகநலத்துறை சார்பில் ஒரு குழுவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரி ரஞ்சித பிரியா தலைமையிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமூக பாதுகாப்பு துறை இயக்குநர் வளர்மதி ஐஏஎஸ் தலைமையிலான குழு விடுதியில் விசாரணை நடத்தி வருகிறது. வளர்மதி தலைமையிலான குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை என அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார்.