கட்சியும் கொடியும் எங்களுக்குதான்.. “அடுத்து திமுக, சசிகலாவுக்கு இருக்கு” - ஈபிஎஸ் டீம் பரபர!
திருப்பூர் : அதிமுகவின் கொடியும் ஒன்றரைக் கோடி தொண்டர்களும் இனி எடப்பாடி பழனிச்சாமிக்குத் தான் சொந்தம் என்றும் இனி வேறு யாரும் கூக்குரல் இட முடியாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றாலும் அங்கே அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
ஈபிஎஸ் ஆதரவாளரான அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று திருப்பூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, புதிய தெம்போடு திமுகவை விரைவில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதிமுக ஆட்சி அமைக்க மக்கள் தயாராவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி “ரிடர்ன்ஸ்” - பந்தாடப்படும் அதிமுக! “ஜிக் ஜாக்” தீர்ப்புகள்! தலைகள் டூ இலைகள் “குழப்பம்”
அதிரடி தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி அளித்த உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் மேல்முறையீடு செய்த வழக்கில், தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாக 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்றனர்.
கொடி ஈபிஎஸ்ஸுக்கே சொந்தம்
ஈபிஎஸ் ஆதரவாளரான அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "எத்தனையோ சோதனைகளை கடந்து அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை தீர்ப்பின் மூலம் காட்டியுள்ளார்கள். அதிமுக கொடி, அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இனி எடப்பாடி பழனிசாமிக்குத் தான் சொந்தம். வேறு யாரும் இனி கூக்குரல் இட முடியாது.
பேச்சுக்கே இடமில்லை
இது அதிமுகவினர் மட்டும் எதிர்பார்த்த தீர்ப்பு கிடையாது. நாட்டு மக்களும் எதிர்பார்த்த தீர்ப்பு. இனிமேல் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தாலும் அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யும். இனிமேல் இரட்டைத் தலைமை என்ற பேச்சுக்கு இடமே இல்லை, எப்போதும் ஒற்றைத் தலைமைதான்.
திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம்
திமுகவிற்கு எதிராக இனி கடுமையாக அதிமுக களத்தில் போராடும். இதுவரை தலைமை தொடர்பாக குழப்பம் இருந்த நிலையில் இனி எடப்பாடி பழனிசாமி தான் தலைமை என்றாகிவிட்டது. இனி கடுமையாக போராடுவோம். புதிய தெம்போடு திமுகவை விரைவில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதிமுக ஆட்சியை அமைக்க மக்கள் தயாராவார்கள்.
தென்மாவட்டங்களில் அதிமுக
தென்மாவட்டங்கள் எப்போதுமே அதிமுகவிற்கு ஆதரவாக உள்ளது. இப்போதும் அப்படித்தான் உள்ளது. தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு அரணாக இருப்பார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்." எனத் தெரிவித்தார்.
சசிகலா காரில்
சசிகலா இன்னும் அதிமுக கொடியை பயன்படுத்துவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பொள்ளாச்சி ஜெயராமன், "கட்சிக்கு இன்னார் தான் வழிகாட்ட வேண்டும் என நீதிமன்றம் சொன்ன பிறகும் சசிகலா கட்சிக் கொடியை கட்டிக்கொண்டு இருந்தால் அது தவறு தான். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்." எனத் தெரிவித்தார்.