கோர்ட் உத்தரவு.. திருப்பூரில் மசூதிக்கு ”சீல்” வைக்க சென்ற அதிகாரிகள்.. இஸ்லாமியர்கள் போராட்டம்
திருப்பூர்: மசூதிக்கு அதிகாரிகள் சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் பேரணியாக சென்று பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
திருப்பூர் வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் கடந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக மசூதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் இஸ்லாமியர்கள் 5 வேளை தொழுகை நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் அனுமதி பெறாமல் இந்த பள்ளிவாசல் செயல்படுவதாகவும் அதை மூட வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சீல் வைக்க முயற்சி
இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினருடன் பள்ளிவாசலுக்கு சீல் வைக்க சென்றனர். அப்போது அங்கிருந்த இஸ்லாமியர்கள் பள்ளிவாசலுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பள்ளிவாசலுக்கு உள்ளே இருந்துகொண்டு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் பள்ளிவாசலுக்கு சீல் வைக்க முயன்றனர்.
சாலை மறியல்
பள்ளிவாசலுக்கு சீல் வைக்க அதிகாரிகள் சென்ற தகவல் சமூக வலைதளங்களிலும் பரவியது. இதனை தொடர்ந்து திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள உஷா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். மேலும் பள்ளிவாசலுக்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகளை கண்டித்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள்.
பேரணி
சிறிது நேர மறியலுக்கு பிறகு நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்ற திரண்டு திருப்பூர் தாராபுரம் சாலையில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக மாநகராட்சி நோக்கி பேரணியாக சென்றனர். அங்கு மாநகராட்சி சிக்னலில் அமர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள் பள்ளிவாசல் மூடப்படுவதை கண்டித்து கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
மாநகராட்சி மீது குற்றச்சாட்டு
இதேபோல் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலம்பாளையம் மசூதி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலேயே, மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினருடன் அத்துமீறி பள்ளிவாசலுக்கு சீல் வைக்க முயல்வதாக பல்லடம் பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பலர் கைது
திருப்பூர் மங்கலம் நால்ரோடு பகுதியில் அனைத்து இஸ்லாமியை கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் திரளாக கூடி பள்ளிவாசலுக்கு சீல் வைக்க சென்ற திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், வாகனங்களில் ஏற்றிச்சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.