செங்கல்பட்டு வேக்சின் மையத்தை.. தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்
டெல்லி: செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் வேக்சின் உற்பத்தி மையமான எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்திலேயே வேக்சின் உற்பத்தியை தொடங்குவதற்காக தமிழக அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. போதிய அளவு வேக்சின் மத்தியில் இருந்து வழங்கப்படாத நிலையில், தமிழக அரசே வேக்சின் உற்பத்தியை தொடங்கும் முடிவில் உள்ளது.
இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் முதல்வர் ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தை பார்வையிட்டார்.

பார்வையிட்டார்
மத்திய அரசின் இந்த மையம் உலகத்தரமானது. இதைத்தான் எப்படியாவது இயங்க வைக்கும் முடிவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். 2012ல் திறக்கப்பட்ட இந்த மையம் கிட்டத்தட்ட 9 வருடமாக இயங்கவே இல்லை. தமிழகம் மட்டுமல்ல இந்திய முழுமைக்கும் இங்கிருந்து வேக்சின் உற்பத்தி செய்து அனுப்ப முடியும். சில மாதங்களில் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு இந்த எச்.எல்.எல். பயோடெக் நிறுவனம் மூலம் வேக்சின் வழங்கிட முடியும்.

வேக்சின்
இந்த நிலையில் இந்த எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், எச்.எல்.எல். பயோடெக் நிறுவனம் கட்டப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த நிறுவனம் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

செலவு
700 ரூபாய் கோடி செலவில் கட்டப்பட்டும் இன்னும் இந்த மையம் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதை தனியாருக்கு குத்தகைக்கு கொடுக்கும் மத்திய அரசின் முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டன. இதனால் தமிழக அரசுக்கே இந்த நிறுவனத்தை குத்தகைக்கு கொடுக்க வேண்டும். தமிழக அரசு வேறு தனியாருடன் இணைந்து கூட்டு வேக்சின் உற்பத்தியை மேற்கொள்ளும்.

மத்திய அரசு
மத்திய அரசு இந்த ஒருங்கிணைத்த வேக்சின் உற்பத்தி மையத்தை வழங்குவதன் மூலம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் வேக்சின் தேவையும் சரி செய்யப்படும். தமிழக அரசுக்கு முழு ஆபரேஷன் உரிமையோடு இந்த மையத்தை குத்தகைக்கு வழங்கிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஆலோசனை செய்ய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை டெல்லி புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications