அமைச்சரிடம் கெட்ட வார்த்தையில் திட்டு வாங்குறது தான் வேலை.. அசிங்கமா இல்ல? - பாஜக லீடர் பரபர பேச்சு!
திருச்சி : "கெட்ட வார்த்தையில் அமைச்சர் திட்டுவதை வாங்கிவிட்டு வருவது தான் காவல்துறை அதிகாரிகளுக்கு வேலையாக இருக்கிறது. உங்களுக்கெல்லாம் அசிங்கமாக இல்லையா?" என பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் கடுமையாக தாக்கிப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.ராஜசேகரன் தலைமை வகித்தார்.
அப்போது பேசிய ராஜசேகரன், தினமுக் காலையில் அமைச்சர் வீட்டுக்குச் சென்று திட்டு வாங்கி வருவதுதான் இங்கு இருக்கும் காவல்துறை அதிகாரிகளின் வேலை என விமர்சித்துள்ளார்.

பாஜக ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட பாஜக சார்பில், "தாய் மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுதும் திறனற்ற திமுக" எனும் பெயரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

யாருக்கு விடியல்
மேலும் பேசிய அவர், "திருச்சி அமைச்சர் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் தமிழை எங்கு வளர்த்தனர்? மின் கட்டண உயர்வு, சொத்து வரி, பால் விலை உயர்வு ஆகிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இந்தி திணிப்பு என்று திமுக கூறி வருகிறது. தமிழ் மீது உண்மையான அக்கறை இருந்தால் தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ''ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போறாரு'' என்று பாடப்பட்டு வந்தது. ஆனால் யாருக்கு விடியல் தந்தார் என்று இன்று வரை தெரியவில்லை.

அமைச்சரிடம் திட்டு வாங்கும் போலீஸ் அதிகாரிகள்
கடந்த ஒரு மாதத்தில் திருச்சி முழுமையாக கொலை நகரமாக மாறிவிட்டது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களை செயல்படவே விடுவதில்லை. தினமும் காலையில் காவல்துறை அதிகாரிகள் அமைச்சர் வீட்டிற்கு சென்று விடுகிறார்கள். அமைச்சர் போலீஸ் அதிகாரிகளிடம் காலையில் 'சுப்ரபாதம்' பாடுவார். கெட்ட வார்த்தையில் அமைச்சர் திட்டுவதை வாங்கிவிட்டு வருவது தான் காவல்துறை அதிகாரிகளுக்கு வேலையாக இருக்கிறது. உங்களுக்கெல்லாம் அசிங்கமாக இல்லை?

இதான் உங்க வேலையா?
காலையில் சென்று அமைச்சரிடம் திட்டு வாங்குவது தான் உங்கள் வேலையா? காவல் துறையினர் தங்களது வேலையை சரிவர செய்ய வேண்டும் என்று தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன். எல்லாரும் நல்ல அதிகாரிகள், நல்ல திறமையான அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், யாருமே செயல்பட விடுவதில்லை. செயல்படவும் அதிகாரிகள் தயாராக இல்லை.

2 மாதங்களில்
கடந்த 2 மாதங்களில் திருச்சியில் போதை ஊசிகளுக்கு இளைஞர்கள் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். 25 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும் ஏராளமான இளைஞர்கள் இறந்திருக்கிறார்கள். சட்டவிரோதமாக, அனுமதிக்கப்படாத நேரங்களில் டாஸ்மாக்கை திறந்து வைத்திருப்பதால், அதை வாங்கிக் குடித்தும் பலர் உயிரிழந்துள்ளனர்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications