விடுதலைக்கு பிறகும் போராட்டம்.. திருச்சி முகாமில் உண்ணாவிரதம்! மயங்கிய ஜெயக்குமார் - தொடரும் பயஸ்
திருச்சி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாமில் தங்களுக்கு வேறொரு அறை ஒதுக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இவர்களில் ராபர்ட் பயஸ் என்பவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பு படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் எனக்கூறி பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜீவ் கொலை- மனிதவெடிகுண்டு தணுவின் கூட்டாளி A1 நளினி, 4 ஈழ தமிழர்- மத்திய அரசு மறு ஆய்வு மனு ஏன்?
தீர்ப்பும் தீர்மானமும்
ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் கைதான 7 தமிழர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கியது. கடந்த 2014 ஆம் ஆண்டு 7 தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரறிவாளன் விடுதலை
ஆனால் தமிழக ஆளுநர் அதை கிடப்பில் போட்டார். இந்த நிலையில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை கடந்த மே மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி விடுதலை செய்தது. அதே சட்டத்தை பயன்படுத்தி தங்களையும் விடுவிக்க நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சிறப்பு முகாம்
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிறையில் இருந்து நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த நளினியும், ரவிச்சந்திரனும் விடுவிக்கப்பட்ட நிலையில், இலங்கை தமிழர்களான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் திருச்சியில் உள்ள முகாமில் அடைக்கப்பட்டனர்.
தனி அறை கோரிக்கை
இந்தநிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் சிறப்பு முகாமில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ஆகியோர் தங்களுக்கு வேறொரு அறை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை அறை ஒதுக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
ஜெயக்குமாருக்கு உடல்நலக்குறைவு
இதனை வலியுறுத்தி 2 நாட்களுக்கு முன்பு ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய இருவரும் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர். இதில் ஜெயக்குமாரின் உடல் சோர்வு ஏற்பட்டு மூச்சு திணறி மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி அரசு மருத்துவமனையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை தமிழர்கள் போராட்டம்
ராபர்ட் பயஸ் சிறப்பு முகாமில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனை அடுத்து மாநகர காவல் துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். இது ஒருபுறம் இருக்க ஏற்கனவே சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்க கோரி தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.