நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின்தான் தமிழக முதல்வர்.. கிளப்பிவிடும் கடம்பூர் ராஜு
தூத்துக்குடி: நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக ஆவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
அமைச்சர்களின் நடவடிக்கைகளால் ஸ்டாலினால் நிம்மதியாக தூங்கக் கூட முடியவில்லை என்றும் இதனை அவரே திமுக பொதுக்குழுவில் தெரிவித்துள்ளார் எனவும் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

திமுக அரசு
சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு உள்ளிட்டவைகளை எதிர்த்தும் திமுக அரசை கண்டித்தும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு பற்றி பேசுவதை காட்டிலும் உதயநிதி ஸ்டாலின் பற்றியே அதிகம் பேசினார். அதிலும் குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு உதயநிதி முதலமைச்சராக வருவார் என அவர் பேசியது தான் இதில் குறிப்பிடத்தக்கது.

பட்டாபிஷேக விழா
உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டாபிஷேக விழா நடைபெற்று முடிந்துள்ளதாக விமர்சித்த கடம்பூர் ராஜூ, இதனை திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் விழாவாக தாம் பார்க்கிறேன் எனக் கூறினார். திமுகவில் வாரிசுகளுக்கு மட்டுமே பதவி கிடைக்கும் என்றும் அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக வர முடியும் எனவும் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இந்தியாவிலேயே தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை எனக் கூறிய ஒரே முதல்வர் ஸ்டாலின் தான் என கடம்பூர் ராஜு கிண்டல் செய்தார்.

அதிமுக ஆட்சியில்
கடந்த அதிமுக ஆட்சியில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டதாகவும் இந்திய அளவில் பல்வேறு விருதுகள் பெற்றதாகவும் கூறிய கடம்பூர் ராஜூ, திமுக ஆட்சியில் காவல்துறையால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். இதற்கு காரணம் திமுகவில் 9 முதல்வர் இருப்பதே என விமர்சித்த அவர், ஸ்டாலின் பொம்மை முதல்வராக மட்டுமே இருப்பதாக கடம்பூர் ராஜூ விமர்சித்தார்.

கடைசி வரை
இதனிடையே சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு பற்றி கடைசி வரை பெரிதாக பேசாத அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை பற்றி மட்டுமே திரும்ப திரும்ப பேசினார். எந்த விவகாரத்திற்காக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதோ அதை விடுத்து அடுத்தடுத்த தலைப்புகளை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications