திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்! முருகனை பக்தியுடன் வழிபட்ட துரை வைகோ!
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்ற மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, அங்கு பின்பற்றப்படும் விதிமுறையை முழுமையாக கடைபிடுத்து வழிபாடு நடத்தியுள்ளார்.
1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு போக வேண்டும் என்று தாம் விருப்பப்பட்டதன் பேரில் மாவட்டச் செயலாளர் தன்னை அங்கு அழைத்துச் சென்றதாக கூறியிருக்கிறார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வந்தது குறித்து துரை வைகோ தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

திருச்செந்தூர் முருகன் கோவில்
''தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருச்செந்துார் நகரில் 21.12.2022 காலை மாமனிதன் வைகோ ஆவணப்படத்தை வெளியிட்டுவிட்டு புறப்படும் போது, மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் புதுக்கோட்டை செல்வம் அவர்களிடம், 1200 ஆண்டுகள் பழைமையான செந்தில் ஆண்டவர் திருக்கோவிலுக்கு செல்லவேண்டும் என விருப்பம் தெரிவித்தேன். அதைத்தொடர்ந்து அங்கு பின்பற்றப்படும் விதிமுறைப்படி கோவிலுக்குள் சென்று திருமுருகனை வழிபட்டேன்.''

வெங்கடேசப் பெருமாள் கோவில்
''அதற்கு அடுத்த மண்டபத்தில் அமைந்துள்ள வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கும் சென்று வழிபட்டேன். வேலைப்பாடுகளுடன் அமையப்பெற்ற மண்டபங்கள், தூண்கள் பிரமிக்கத்தக்கதாக இருப்பதைக் கண்டேன். ஆறுபடை வீடுகளில் ஒரு படை வீடான திருச்செந்தூர் திருமுருகன் திருக்கோவில் மட்டும் தான் கடற்கரையின் மீது அமைந்துள்ளது என்பது இதன் தனிச்சிறப்பாகும்.''

ஆறுகால பூசை
''மாபெரும் விடுதலைப் போராட்ட நாயகர்களில் ஒருவரான பாஞ்சை வேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மன், திருச்செந்தூர் சன்னிதானத்தில் ஆறுகால பூசை நடக்கும்போது பாஞ்சாலங்குறிச்சியில் மணியோசை கேட்கும் ஏற்பாடு செய்திருந்தார் என்றும், அத்தருணத்தில் அரண்மனையில் இருந்தவாரே திருமுருகனை வழிபட்டார் என்றும், முருகக்கடவுள் மீது பக்தி மிகக் கொண்டிருந்தார் என நான் கேள்விப்பட்டிருந்த செய்தியும் என் மனதில் எழுந்தன.''

பல லட்சம் பக்தர்கள்
''பல லட்சம் பக்தர்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் வந்து வழிபடும் இத்திருத் தலத்திற்கு வந்து திருமுருகக் கடவுளை வழிபட்டுச்செல்ல கிடைத்த வாய்ப்பினை நினைத்து மகிழ்ந்தேன்.'' இவ்வாறு மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications