காலை மாற்றிய மருத்துவர் பணியிட மாற்றம் ... கோவில்பட்டி பாட்டிக்கு மீண்டும் அறுவை சிகிச்சை
தூத்துக்குடி: வலது கால் வலியால் அவதிப்பட்ட பாட்டிக்கு இடது காலில் அறுவை சிகிச்சை செய்த கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த மணி முருக குமார் என்பவரது மனைவி குருவம்மாள் (67).
மணி முருக குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதியின் மகன்கள் வெளியூரில் பணியாற்றி வருகின்றனர்.
அறுவை சிகிச்சை
இந்த நிலையில் குருவம்மாள் கடந்த ஜனவரி மாதம் வலதுகால் மூட்டுப்பகுதியில் வலி இருப்பதாக கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றார். 3 மாதங்களாக குருவம்மாள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி அரசு மருத்துவமனை சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர் வலதுகாலில் சிறிய அறுவை சிகிச்சை செய்தால் வலி குணமாகிவிடும் என பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
மாறிய கால்
இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குருவம்மாளுக்கு கடந்த 4 ஆம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. ஆனால் வலது காலுக்கு பதிலாக இடது காலில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ததாக மூதாட்டி குருவம்மாள் பரபரப்பு புகாரை கூறியுள்ளார். இதனால் தனக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குருவம்மாள் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மருத்துவர் மீது நடவடிக்கை
இதுகுறித்து விளக்கமளித்த கோவில்பட்டி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர், "குருவம்மாள் என்ற பெண்ணுக்கு தவறுதலாக அறுவை சிகிச்சை செய்ததாக தகவல் வந்தது. அதன் பேரில் நாம் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டோம். அறுவை சிகிச்சை செய்த குழுவிடமும் விசாரணை செய்து மருத்துவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்போம். தற்போது அந்த மருத்துவரை ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றி இருக்கிறோம். 2 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்படும்." என்றார்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மீது புகார்
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது மூதாட்டி ஒருவருக்கு தவறுதலாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனைகளை கட்டி இருப்பதாகவும், தங்கள் வியாபாரத்துக்காக அரசு மருத்துவமனை வளாகத்தில் இடைத்தரகர்களை அனுமதித்துள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள். அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு செவிலியர்கள் உயிர் பயம் காட்டி, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும், இதன் மூலம் லட்சக்கணக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.