குலசை தசரா கோலாகலம்... காளி வேடமிட்டு ஆக்ரோஷமாக ஆடும் பக்தர்கள்..நள்ளிரவில் சூரசம்ஹாரம்
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் தசரா விழா களைகட்டியுள்ளது. காளி வேடம் அணிந்த ஏராளமான பக்தர்கள் ஆக்ரோஷமாக ஆடியது காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் இன்று நள்ளிரவு கடற்கரையில் நடைபெறுவதைக் காண லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூர் அடுத்த படியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் முத்தாரம்மன் கோவில் திருவிழா களையிழந்து காணப்பட்டது. இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சி ஆன மகிசாசூரசம்காரம் இன்று நள்ளிரவு கோவில் கடற்கரையில் நடக்கிறது.
குலசை முத்தாரம்மன் திருவிழா
விழா நாட்களில் தினமும் பல்வேறு திருக்கோலங்களில் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. 7வது திருநாளன்று காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலை 4.30 மணிக்கு மகிஷாசூரன் வீதியுலா, மாலை 4 மற்றும் 5 மணிக்கு சமயசொற்பொழிவு, மாலை 6 மணி பரதநாட்டியம், இரவு 8 மணி கலைநிகழ்ச்சி, இரவு 10 மணி பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
சூரசம்ஹாரம்
இத்திருக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வீடுபேறு கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இன்று சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அக்னிசட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பல மணி நேரம் காத்து இருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தசரா குழுக்கள்
தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தசரா குழுவினர் குழுக்களாக குலசேகரன்பட்டினம் வரத்துவங்கி உள்ளனர். அவர்கள், சிதம்பரேஸ்வரர் கடலில் நீராடி புனித நீர் எடுத்து மேளதாளத்துடன் கோயிலுக்கு வந்து அம்மன் பாதத்தில் பூஜை நடத்தி வேடம் அணிந்து வருகின்றனர்.
கடற்கரையில் மகிஷாசூரசம்ஹாரம்
இன்று காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளது. இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறுகிறது. இரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளுவார். அப்போது காளி வேடம் அணிந்த திரளான பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து ஆடியபடி செல்வார்கள்.
மகிஷாசூரன் வதம்
முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரனை முத்தாரம்மன் சம்ஹாரம் செய்யும் போது கூடியிருக்கும் பல லட்சக்கணக் கான பக்தர்கள் ஓம் காளி, ஜெய் காளி என்று முழக்கமிடுவார்கள். அசுர வதம் முடிந்து கடற்கரை மேடையில் எழுந்தருளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைவார்.
குலசை தசாரா நிறைவு
குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
தசரா திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குலசையில் குவிந்ததால் காணும் இடம் எங்கும் மனித தலைகளாக காணப்படுகிறது. வேடம் அணிந்த பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தினர். பதினோராம் நாளான நாளைய தினம் அம்மன் பூஞ்சரப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மாலை 4 மணிக்கு கொடி இறக்கப்பட்டு காப்பு களைதல் நடைபெறும் வேடமணிந்து வந்த பக்தர்களும் காப்புகளை களைவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் அபிஷேகம் நடைபெறும். வெள்ளிக்கிழமை காலை சிறப்பு பாலபிஷேகத்துடன் குலசை தசரா திருவிழா நிறைவடைகிறது.
போலீஸ் பாதுகாப்பு
சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் கோவில் வளாகம் கடற்கரை பகுதி நகர் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 48 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். கோவில் கடற்கரையில் மகிசாசூரசம்காரம் நடைபெறுவதால் கடற்கரை பகுதியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.