பறந்துவந்த “பெட்ரோல் குண்டு” - ஜஸ்ட் மிஸ்! தூத்துக்குடியில் தப்பிய பாஜக பிரமுகரின் ஆம்னி பஸ்
தூத்துக்குடி: பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவர் ரமேஷ் என்பவரது ஆம்னி பேருந்து மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாஜகவை சேர்ந்தவர் ரமேஷ். ஓபிசி அணியின் மாநில துணைத்தலைவரான இவர் விவேகம் டிராவல்ஸ் என்ற பெயரில் தூத்துக்குடியில் இருந்து சென்னை மற்றும் கோவைக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் இவரது ஆம்னி பேருந்து நேற்று இரவு திருச்செந்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கோயம்புத்தூருக்கு புறப்பட்டது.

பெட்ரோல் குண்டு
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே இந்த பேருந்து பயணிகளை ஏற்றிசெல்லும்போது மேம்பாலத்திலிருந்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். நல்வாய்ப்பாக பெட்ரோல் குண்டு பேருந்தின் மீது படாமல் தரையில் விழுந்தது. இதன் காரணமாக மிகப்பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.

போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்தியராஜ் மற்றும் வடபாகம் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விவேகம் ரமேஷ் வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை தாக்குதல்
கடந்த வியாழக்கிழமை மாலை கோவை பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவும் கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை அதிகரித்தது.

டிஜிபி எச்சரிக்கை
இதன் தொடர்ச்சியாக சென்னை, மதுரை, கன்னியாகுமரி, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவங்கள், வாகனங்களுக்கு தீ வைத்த நிகழ்வுகளும் அரங்கேறின. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்த நிலையில், தூத்துக்குடியில் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications