மேள தாளம்.. சாத்தான்குளம் ஊரே ஒன்னு கூடிடுச்சி, யாருக்குப்பா கல்யாணம்னு பார்த்தா.. அங்கதான் ட்விஸ்ட்
பருவ மழை பொய்த்து விட்டதால் மழை வேண்டி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வினோத திருமணம் நடைபெற்றது.
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள சாத்தான் குளம் பகுதியில் இருக்கும் கிராமம் ஒன்றில் அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் ஊர் மக்கள் திருமணம் செய்து வைத்தனர். உண்மையான திருமணம் போலவே வெகு விமர்சையாக இந்த திருமணம் நடைபெற்றது. எதற்காக இந்த வினோத திருமண நிகழ்வு நடைபெற்றது என்ற விவரங்களை கீழே காணலாம்.
தமிழ்நாட்டில் மக்கள் வேண்டுதல்கள் நிறைவேற பல்வேறு விதமாக வழிபடுவதை கேள்வி பட்டு இருக்கிறோம். குறிப்பாக மழை பொய்த்து விட்டால் மழை பெய்ய வேண்டி நூதன முறையில் வேண்டுதல்கள் நடைபெற்று வருவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது.
அதிலும் கிராமப்புறங்களில் வியக்க வைக்கும் வகையில் வித விதமான முறையில் நூதன முறையில் வழிபாடுகள் நடக்கும்.
மழை பெய்ய வேண்டி..
கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைப்பது போன்ற பல்வேறு நூதன நிகழ்வுகளும் சில இடங்களில் நடைபெற்று இருப்பதை கேள்விப்பட்டு இருப்போம். மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இதுபோன்ற வழிபாடுகளை மேற்கொள்வது உண்டு. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் ஊர் மக்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-
அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்..
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சிதம்பரபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் முத்தராம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஒரு அரசமரமும் வேப்பமரமும் ஒட்டி ஒட்டி அமைந்துள்ளன. இந்த இரு மரங்களுக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற ஐதீகம் அந்த கிராமத்து மக்கள் மத்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி கோவில் வளாகத்தில் இருக்கும் அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிஜ திருமணம் போல தடபுடலாக...
உண்மையாக ஒரு திருமணம் நடந்தால் எப்படி நடக்குமோ அதே போன்று வெகு விமர்சியாக இந்த திருமணம் நடைபெற்றதுதான் ஹைலைட். ஊர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. கோவில் முன்பாக பந்தல் போடப்பட்டது. அலங்கார வளைவுகள் , தாம்பூல தட்டுக்களில் பழ வகைகள், கற்கண்டு, சாக்கலேட், பூக்கள், போன்ற பொருட்களுடன் மக்கள் கோவில் இருக்கும் தெருவில் மேளதாளத்துடன் வந்தனர்.
மேள தாளங்கள் முழங்க கட்டப்பட்ட தாலி
ஊர்மக்கள் அனைவரும் திருமண நிகழ்விற்கு வருவது போல முக மலர்ச்சியுடன் வருகை தந்தனர். கோவிலில் இருக்கும் இரு மரங்களுக்கும் மேள தாளங்கள் முழங்க தாலி கட்டும் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளும் அபிஷேக தீபாராதனைகளும் நடத்தப்பட்டு இரு மரங்களுக்கும் மஞ்சளால் ஆன மாங்கல்யம் கட்டப்பட்டது. அப்போது பட்டாசு போட்டும் மக்கள் கொண்டாடினர்.
பிரசாதமாக மஞ்சள் கயிறு
இந்த திருமணம் முடிந்த பிறகு பொதுமக்களுக்கு பிரசாதமாக மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. அதன்பிறகு வந்திருந்த ஊர்மக்கள் அனைவருக்கும் உணவு விருந்தும் கொடுக்கப்பட்டது. மழை பெய்ய வேண்டி கோவில் வளாகத்தில் இருக்கும் அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருணம் செய்து வைக்கப்பட்ட நிகழ்வு சுற்று வட்டார பகுதி மக்கள் மத்தியில் வியப்புடன் பேசப்பட்டது.