நான் பேச ஆரம்பிச்சேன்னு வைங்க.. ஒரு மாதத்துக்கு துரைமுருகன் தூங்க முடியாது.. ஏசிஎஸ் எச்சரிக்கை
ரெய்டு நடந்ததற்கு என்னை காரணம் சொல்வதா என ஏசி சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
வேலூர்: "நான் மட்டும் பேச ஆரம்பித்தால்.. துரைமுருகன் ஒரு மாசம் தூங்கவே மாட்டார். அவர் வீட்டில சோதனை நடந்தா என் மேல பழியை போடறதா?" என்று ஏசி சண்முகம் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஏசி சண்முகம் போட்டியிடுகிறார். அதேபோல, திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு துரைமுருகன் வீட்டில் திடீர் ரெய்டு நடத்தப்பட்டது. இது தமிழக அரசியல் களத்தையே பரபரப்பாக்கியது.
ஏன் துரைமுருகன் வீட்டில் மட்டும்?.. சீமான் சொன்னது சரிதான்.. பாரபட்சத்தை விலக்குமா தேர்தல் ஆணையம்
ஏசி சண்முகம்
இந்த ரெயிடு விவகாரத்தின் பின்னணியில் ஏசி சண்முகம் இருப்பதாக ஒரு பெயர் அடிப்பட்டது. இது சம்பந்தமாக ஏசி சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னதாவது:
அப்பட்டமான பொய்
துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடந்திருக்கிறது. ஆனால் இதற்கு நானும் பாஜகவும்தான் காரணம் என்று துரைமுருகன் தெரிவித்து இருக்கிறார். இது அப்பட்டமான பொய். போன மாசம்கூட கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடந்தது. அப்போ நாங்க யார் மேலேயும் எந்த பழியும் போடலையே?
தூங்க மாட்டார்
எப்பவுமே அண்ணன் துரைமுருகன் மீது எனக்கு ரொம்ப மரியாதை. இருந்தாலும் அரசியல் நாகரிகம் கருதி நான் இதுவரைக்கும் எதுவுமே பேசவில்லை. நான் மட்டும் பேச ஆரம்பித்தால் துரைமுருகன் ஒரு மாசம் தூங்க மாட்டார். ஏன்னா.. இவர்களுக்கு எந்த நாட்டில் என்னென்ன இருக்கு என்பதை எல்லாம் நான் வெளியே சொல்ல வேண்டியதாக இருக்கும்.
பழி போடலாமா?
பொதுவாக இந்த மாதிரி ரெய்டு எல்லாம் ஒருத்தர் போனில் பேசறதை உளவுத்துறை மூலம் அறிந்து, அதன்மூலம்தான் நடைபெறும். இது கூட தெரியாமல் அடுத்தவர் மீது அநாவசியமாக பழிபோடுவது ரொம்ப தவறு" என்றார்.