அக்னிபத்.. 4 வருட ராணுவ பணி தவறு.. இளைஞர்கள் சாலை மறியல்.. வேலூரில் பரபரப்பு
ராணுவத்தில் பணிபுரிய இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் அக்னிபத் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்: ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணி என்பதை ரத்து செய்யக்கோரி வேலூரில் இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவ உடற்தகுதி தேர்வில் தேர்வான இளைஞர்கள் எழுத்து தேர்வு நடத்த கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
அக்னிபத் என்ற புதிய திட்டத்துக்கு அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

அக்னிபத் திட்டத்தின்படி ராணுவத்தில் 17.5 முதல் 21 வயதுள்ள 45 ஆயிரம் பேர், 4 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். இதன்மூலம் இளைஞர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைப்பதோடு, ஆயுதப்படை இளம் வீரர்கள் படையாகும் என்று அமைச்சகம் தெரிவிக்கிறது.
இதற்கான ஆட்கள் தேர்வு அடுத்த 90 நாட்களில் ஆன்லைன் மூலம் முறையில் நடக்கவுள்ளது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆள்கள் தேர்வு செய்வதற்கான கல்வி தகுதியே, அக்னிவீரர்களுக்கும் பொருந்தும்.
அதன்படி, புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மட்டங்களில் பயிற்சி வழங்கப்படும். பல்வேறு துறைகளில், புதிய திறன்களுடன் வேலைவாய்ப்புகளை இந்த திட்டம் உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பர். இதற்காக மாத சம்பளம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரத்துடன் படிகளும் வழங்கப்படும். மருத்துவ மற்றும் காப்பீடு வசதிகளும் வழங்கப்படும்.
4 ஆண்டுகளுக்குப் பின்னர், 25 சதவிகித வீரர்களுக்குப் பணி நீட்டிக்கப்பட்டு, ஆயுதப்படைகளில் 15 ஆண்டுக்காலம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஆயுதப்படையில் சேர முடியாதவர்களுக்கு 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ராணுவத்தின் செலவு குறையும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பீகார், ராஜஸ்தானில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல தமிழகத்தில் வேலூரிலும் ராணுவத்தில் பணி புரிய முயற்சி மேற்கொண்டுள்ள இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் வேலூர்,திருவண்ணாமலை,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென குவிந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்காக ஆட்களை சேர்க்க திருவண்ணாமலையில் நடைபெற்ற உடற் தகுதி தேர்வில் இவர்கள் தேர்வானார்கள் ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் கொரோனாவை காரணம் காட்டி எழுத்து தேர்வு நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ராணுவத்திற்கு செல்ல ஆர்வமுள்ள இவர்கள் உடனடியாக எழுத்து தேர்வை நடத்த கோரியும் வலியுறுத்தினர்.
மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணி என்பதை ரத்து செய்ய கோரி மறியல் செய்ய முயன்றனர் ஆனால் அவர்களை வேலூர் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க அறிவுறுத்தி காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். இளைஞர்களின் திடீர் மறியல் காரணமாக வேலூர் பேருந்து நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications