புதைந்த குடிநீர் குழாய்.. ஒப்பந்தத்தாரர் அதிரடி கைது.. ஸ்மார்ட்சிட்டி பணி செய்வோருக்கு எச்சரிக்கை!
வேலூர்: வேலூரில் அடிகுழாயுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கால்வாய்கள், சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் சிஎம்சி எதிரே உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தையும், சாய்நாதபுரம் பகுதியில் ஜீப்பையும் அப்புறப்படுத்தாமல் சாலைப் போடப்பட்டிருந்தது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள், செய்திகள் பரவியது.

ஸ்மார்ட் சிட்டி சம்பவங்கள்
இதனைத்தொடர்ந்து ஜீப் மற்றும் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பின்னர் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெருவில் பயன்பாட்டில் இருந்த அடி பம்பை அகற்றாமலேயே, கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

எச்சரிக்கை
ஏனென்றால் ஒருமுறை, இரு முறை என்றால் சிறிய தவறு நடந்துவிட்டதாக எண்ணலாம். ஆனால் இது மூன்றாவது முறை. இதனால் வேண்டுமென்றே தவறுகள் செய்யப்படுவதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டினர். இதனைத்தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி பணிகளை கவனக்குறைவாக அலட்சியத்துடன் செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தி இருந்தார்.

தொடரும் அவலம்
இதன்பின்னர் அனைத்து ஒப்பந்ததாரர்களையும் அழைத்து மாநகராட்சி சார்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. இருந்தும், குடிநீர் குழாயுடன் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அதனை சீரமைக்க வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டதை அடுத்து ஒரு பொறியாளர் அடங்கிய மாநகராட்சி குழு சம்பவ இடத்திற்க்கு சென்று கழிவுநீர் கால்வாயின் தடுப்பு சுவரை உடைத்து எடுத்து போர்வெல்லை மீட்டனர்.

ஒப்பந்தம் ரத்து
பின்னர் போல்வெல்லின் மேல்பாகத்தை எடுத்துச் சென்றனர். தற்காலிகமாக போர்வெல்லின் குழாய் மூடப்பட்டுள்ளது. இதன் உயரத்தை உயர்த்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஆய்வு செய்து உயரத்தை உயர்த்தி பணிகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து போர்வெல்லோடு கழிவு நீர் கால்வாய் அமைத்த அந்த பணியின் ஒப்பந்ததாரர் குட்டி சரவணன் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தாரர் கைது
இந்த நிலையில் குடிநீர் குழாயுடன் சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்ட விவகாரத்தில் ஒப்பந்ததாரர் மீது காவல்துறையில் வேலூர் மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமரன் அளித்தார். இதன்பின்னர் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன்பின்னர் ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications