வேலூர் செல்வி வங்கி கணக்கில் குவிந்த பணம்.. ஆறு வருட காத்திருப்பு.. ஆற அமர சம்பவம்.. மேட்டரே வேற
வேலூர்: வேலூரில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் பள்ளியில் மாணவர்கள் செலுத்திய ரூ.27 லட்சம் கல்வி கட்டணத்தை கையாடல் செய்த பெண் காசாளரை போலீசார் கைது செய்தனர். கையாடல் செய்த பணத்தில் சுற்றுலா சென்றதும், வாங்கிய கடனை அடைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் பள்ளி ஒன்று வேலூர் மாநகராட்சி தொரப்பாடி எழில் நகரில் இயங்கி வருகிறது. வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தனியார் பள்ளியில் பயின்று வருகிறார்கள். இங்கு ஆசிரியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள்

இந்த தனியார் பள்ளியில் வேலூர் சாய்நாதபுரம் கலைவாணர்நகரை சேர்ந்த செல்வி (வயது 41) கடந்த 2017-ம் ஆண்டு தட்டச்சராக வேலையில் சேர்ந்தார். சுமார் 6 ஆண்டுகளாக தட்டச்சராக செல்வி பணிபுரிந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரை காசாளர் பணிக்கு பள்ளி நிர்வாகம் உயர்த்தி அறிவித்தது.
இந்நிலையில் காசாளர் செல்வியின் பணி என்னவென்றால், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் செலுத்தும் கல்வி கட்டணத்தை பெற்றுக்கொண்டு அதற்கான ரசீது வழங்கி, மறுநாள் அந்த பணத்தை சென்னையில் உள்ள பள்ளியின் அலுவலக வங்கிக்கணக்கில் வரவு வைக்க வேண்டும். இதுதான் காசாளர் செல்விக்கு கடந்த ஆறுமாதங்களாக கொடுக்கப்பட்ட பணியாகும்.
இந்நிலையில் பள்ளி நிர்வாகம் நடத்திய தணிக்கையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் 3-ந்தேதி வரை மாணவர்களின் கல்வி கட்டண ரசீது மற்றும் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள பள்ளி நிர்வாகத்தின் தணிக்கை குழுவினர் வேலூரில் உள்ள பள்ளியில் மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டண ரசீது, வங்கியின் வரவு உள்ளிட்டவற்றை நேரில் வந்து தணிக்கை செய்தனர்.
அப்போது காசாளர் செல்வி மாணவர்கள் பல்வேறு கட்டங்களாக செலுத்திய கல்வி கட்டணம் ரூ.26 லட்சத்து 90 ஆயிரத்து 127-க்கு ரசீது வழங்கி விட்டு அதனை வங்கிக்கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து தணிக்கை குழுவினர் செல்வியிடம் விசாரணை நடத்தி, கையாடல் செய்த பணத்தை விரைவாக செலுத்தும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால் அவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் கடத்தி வந்திருக்கிறார்.
இதையடுத்து தனியார் பள்ளியின் முதல்வர் ரதிக்குமாரி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் டிஎஸ்பி சாரதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்கள்.
அதில், பள்ளியில் காசாளராக பணிபுரிந்த செல்வி, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் தனது வங்கிக்கணக்கு எண்ணை கொடுத்து அதன் மூலமும், பள்ளியில் செலுத்திய பணத்தை வங்கிக்கணக்கில் வரவு வைக்காமலும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 127 ரூபாய் கையாடல் செய்த கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த பணத்தில் செல்வி சுற்றுலா சென்றதும், வாங்கிய கடனை அடைத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தனியார் பள்ளியில் ரூ.27 லட்சம் கையாடல் கையாடல் செய்த காசாளர் கைது செய்யப்ட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications