சிக்கியது கை துப்பாக்கி.. லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கிய ஆவின் மேலாளர் வீட்டில் பரபரப்பு
வேலூர் : ஆவின் ஒப்பந்த ஊழியரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கி கையும்களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சிக்கிய வேலூர் ஆவின் உதவி பொது மேலாளர் வீட்டில் இருந்து ஒரு கை துப்பாக்கி, 6 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றியும் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், இவர் வேலூர் ஆவின் நிருவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்பிவைப்பவர். ஆவினில் இவர் ஒப்பந்த அடிப்படையில் அனுப்பிய ஆட்களுக்கான ஊதிய நிலுவை தொகை இருந்துள்ளது.
நிலுவை தொகை 5 லட்சத்தி 23 ஆயிரத்தை வழங்க கோரி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் நிறுவனத்தின் உதவி பொது மேலாளராக பணியாற்றி வரும் மகேந்திரமால் (57) என்பவரிடம் பலமுறை கேட்டு வந்துள்ளார் ஜெயசந்திரன்.

லஞ்சம்
பல நாட்களாக தாமதப்படுத்திய நிலையில், 5 லட்சத்தி 23 ஆயிரத்துக்கான நிலுவை தொகை காசோலையை வழங்க உதவி பொது மேலாளர் மகேந்திரமால் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜெயச்சந்திரன் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார்.

ஒப்பந்ததாரர்
புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெயச்சந்திரனிடம் கொடுத்தனுப்பியுள்ளனர். இதனையடுத்து ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன் ஆவின் உதவி பொது மேலாளர் மகேந்திரமாலிடம் காசோலையை அனுமதிக்க ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.

சிக்கினார்
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ரஜினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் மகேந்திரமாலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் லஞ்சமாக பெற்ற 5 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

கள்ளத்துப்பாக்கி
மேலும் மகேந்திரமால் வசித்து வரும் வேலூர் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள தென்றல் நகரில் உள்ள வீட்டை சோதனை செய்த போது உரிமம் இல்லாத பழைய நாட்டு கைதுப்பாக்கி மற்றும் 6 பெரிய தோட்டாக்கள், 2 சிறிய தோட்டாக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மகேந்திரமாலிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை 11.00.மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 9.30.மணி வரை நீடித்தது.











Click it and Unblock the Notifications