துரைமுருகன் வீட்டில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மதிய விருந்து! காட்பாடி சுற்றுப்பயணம் ருசிகரம்!
முதலமைச்சர் ஸ்டாலினை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று மதிய விருந்து கொடுத்த துரைமுருகன்.
வேலூர்: கடந்த 2 நாட்களாக வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அமைச்சர் துரைமுருகன் இன்று தனது வீட்டில் மதிய விருந்து கொடுத்து கவுரவித்திருக்கிறார்.
சைவம், அசைவம் என இரண்டு வகையான உணவு வகைகளும் முதலமைச்சர் ஸ்டாலினுக்காக துரைமுருகன் இல்லத்தில் தயார் செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக அசைவத்தை பொறுத்தவரை கடல் உணவு வகைகள் அமைச்சர் துரைமுருகன் கொடுத்த விருந்து மெனுவில் அதிகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டம்
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து கடந்த 2 நாட்களாக வேலூரில் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். குறிப்பாக நேற்று மாலை ஒன்றரை மணி நேரமும், இன்று காலை 2 மணி நேரமும் முதல்வர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் அனல் பறந்திருக்கிறது. எப்போதும் மென்மையான முறையில் அறிவுறுத்தல் வழங்கும் முதலமைச்சர் இந்த ஆய்வுக் கூட்டங்களின் போது சற்று கட் அண்ட் ரைட்டாகவே பேசியிருக்கிறார்.
மதிய உணவு
முதலமைச்சரின் கறாரான அறிவுறுத்தல்களால் ஆய்வில் பங்கேற்ற அதிகாரிகள் பலரும் திகைத்து போயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே நண்பகல் ஆய்வுக் கூட்டத்தை நடத்திய முதல்வர் ஸ்டாலின், அதன் பிறகு அமைச்சர் துரைமுருகனின் அன்பு அழைப்பை ஏற்று காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் மதிய உணவு சாப்பிட புறப்பட்டுச் சென்றார். அங்கு சைவம், அசைவம் என இரண்டிலும் ஏராளமான உணவு வகைகள் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தன.
கொஞ்சமாக சாப்பாடு
குறிப்பாக அசைவத்தில் மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளை முதல்வர் விரும்பி சாப்பிடுவார் என்பதால் அது தவறாமல் இடம்பெற்றிருந்தது. கண்ணுக்கு முன்னர் சூப்பில் தொடங்கி ஐஸ்கிரீம் வரை வகை வகையான உணவு வகைகள் இருந்தும், முதல்வரோ எப்போதும் போல் கொஞ்சமாக சாதம் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். முதலமைச்சருடன் பயணித்த உயர் அதிகாரிகளும் இந்த விருந்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில் பயணம்
இன்று மாலை காட்பாடியிலிருந்து ரயில் மூலம் முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். முதலமைச்சரின் அடுத்த கள ஆய்வு பயணம் விழுப்புரம் மண்டலத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. இதற்கு அடுத்தபடியாக திருச்சி மண்டலம், மதுரை மண்டலம், நெல்லை மண்டலம், கோவை மண்டலம், சேலம் மண்டலம் என வரிசையாக கள ஆய்வுகள் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.