‘என் தொகுதி.. நீ எப்படி வரலாம்?’ திமுக - அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்குவாதம்.. மேடையிலேயே பரபரப்பு!
திருப்பத்தூர் : அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழாவில், திமுக எம்.எல்.ஏ மற்றும் அதிமுக எம்.எல்.ஏவுக்கு இடையே மேடையிலேயே வாக்குவாதம் நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
நாட்றம்பள்ளியை அடுத்த தாசிரியப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் திமுக எம்எல்ஏவுக்கும் அதிமுக எம்எல்ஏவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சைக்கிள் வழங்கும் விழாவில் மாணவர்கள் முன்னிலையிலேயே ஆளுங்கட்சி எம்.எல்.ஏவும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிமுக 3 முக்கிய புள்ளிகள் திமுகவிற்கு ஜம்ப்? எம்பி ட்வீட்.. பரபரக்கும் அரசியல்
பள்ளியில் அரசு விழா
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தாசிரியப்பனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் 111 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் மாவட்ட சேர்மன் சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினர்.
அதிமுக எம்.எல்.ஏ வாக்குவாதம்
அப்போது வாணியம்பாடி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் பள்ளிக்கு வந்து, "இது என்னுடைய தொகுதி. எனக்கு தகவல் கொடுக்காமல் எப்படி நீங்கள் மாணவர்களுக்கு சைக்கிள் கொடுக்கலாம்?" என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து மாவட்ட குழு தலைவர் சூரியகுமார் சமாதான பேச்சில் ஈடுபட்டார். இருப்பினும் சமாதானம் ஆகாத செந்தில்குமார் அங்கிருந்து கிளம்பினார்.
பள்ளியில் பரபரப்பு
அப்போது அதிமுக எம்.எல்.ஏ செந்தில் குமார் ஆதரவாளர்களுக்கும் ஜோலார்பேட்டை திமுக எம்.எல்.ஏ தேவராஜ் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதன் காரணமாக அரசுப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் மாணவர்கள் முன்னிலையிலேயே மோதல் நிகழ்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
நடந்தது என்ன?
சைக்கிள் வழங்கும் நிகழ்வில் எந்த எம்.எல்.ஏவுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மாவட்ட சேர்மனான திமுகவின் சூரியகுமார் தான் சைக்கிள் வழங்குவதாக இருந்துள்ளது. அவர் மரியாதை நிமித்தமாக திமுக எம்.எல்.ஏ தேவராஜை அழைத்து வந்துள்ளார். அவர் வந்ததைக் கேள்விப்பட்டே, அதிமுக எம்.எல்.ஏ செந்தில் குமார், என் தொகுதியில், அடுத்த தொகுதி எம்.எல்.ஏ எப்படி வந்து சைக்கிள் வழங்கலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.