நீங்க பேசுறத பேசுங்க.. நாங்க செல்போன் பார்க்கிறோம்.. அமைச்சர் பேச்சை செவிமடுக்காத ஊராட்சி தலைவர்கள்!
விழுப்புரம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுவதை கண்டுகொள்ளாமல் ஊராட்சி மன்றத் தலைவர்களும், ஊராட்சி செயலாளர்களும் தங்கள் செல்போன்களை பார்ப்பதில் பிஸியாக மூழ்கி இருந்த நிகழ்வு நடந்துள்ளது.
அமைச்சர் செஞ்சி மஸ்தானை பொறுத்தவரை சற்று பொறுமையானவர், யாரையும் அதிர்ந்து கூட பேசாதவர் என்பதால் அவர்கள் தப்பித்துக் கொண்டார்கள்.
இதே அமைச்சர்கள் கே.என்.நேருவோ, பொன்முடியோ அந்த இடத்தில் இருந்திருந்தால் பேச்சைக் கவனிக்காமல் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தவர்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருப்பார்கள்.

விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. இதில் வெள்ளையும் ஜொள்ளையுமாக கலந்துகொண்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் பலர் அமைச்சர் என்ன பேசுகிறார் என்பதை காதில் வாங்காமல் தங்களுக்குள் பேசிக்கொள்வதும் செல்போன்களை பார்ப்பதுமாக இருந்தனர்.

அரசியல்வாதிகள்
சரி அரசியல்வாதிகள் தான் அப்படி இருக்கிறார்கள் என்று பார்த்தால் அவர்களை விட ஒரு படி மேலாக வாட்ஸ் அப் மெசேஜ்களை பார்ப்பதில் அதிக ஆர்வமாக இருந்தார்கள் ஊராட்சி செயலாளர்கள். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கோபப்பட மாட்டார் என்பதை தங்களுக்கான அட்வாண்டேஜாக எடுத்துக் கொண்டார்கள் போல் அவர்கள். இதனிடையே ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், திட்டங்கள் பற்றி மிகச் சீரியஸாக பேசிக்கொண்டிருந்தார் அமைச்சர் மஸ்தான்.

வாட்ஸ் அப்
இளம் வயதுடையவர்கள் தான் செல்போன்களை பார்க்கிறார்கள் என்றால் அவர்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் 50+ல் உள்ளவர்களும் வாட்ஸ் அப்பை ஸ்க்ரால் செய்வதில் அதிக ஆர்வம் காட்டினர். மொத்தத்தில் அமைச்சர் பேசிக்கொண்டிருக்கிறார், கலந்துகொண்டிருப்பது அரசு நிகழ்ச்சி என எந்தவித மன உறுத்தலும் இன்றி ஏதோ கல்யாண வீட்டில் சாவகாசமாக அமர்ந்து செல்போன் மெசேஜ்களை பார்ப்பது போல் ஊராட்சி தலைவர்களும், செயலாளர்களும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பெண் தலைவர்கள்
இதில் பெண் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு பதில் அவர்களுடைய கணவர், மகன் என குடும்ப உறுப்பினர்கள் பலர் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. உதாரணத்துக்கு எல்லம்மாள் என்ற ஊராட்சி மன்றத் தலைவருக்கு பதில் அவருடைய மகன் அதில் கலந்துகொண்டது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications