ஸ்டாலின் வழி.. பெரியார் வழி! அன்று பெண்கள் ஒடுக்கப்பட்டனர் - இன்றோ.. இதான் திராவிட மாடல் - பொன்முடி
விழுப்புரம்: ஒடுக்கப்பட்ட மகளிருக்கு கல்வி உட்பட அனைத்திலும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அடுத்துள்ளது மனம்பூண்டி கிராமம். இப்பகுதியில் இன்று காலை புதிய நியாய விலைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், ஒன்றிய சேர்மன், அரசு அதிகாரிகள், திமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இந்த விழாவில் அமைச்சர் பொன்முடி திமுக அரசின் சாதனைகளையும், செயல்பாடுகளையும், திராவிட மாடல் ஆட்சியை பற்றியும் விளக்கி பேசினார். அப்போது அவர், "ஒரு காலத்தில் மகளிர் என்றாலே ஒடுக்கப்பட்டவர்கள். அப்படி ஒடுக்கப்பட்ட மகளிருக்கு படிப்பு உட்பட அனைத்திலும் இடமளிக்க வேண்டும் என்பதே திராவிட மாடல்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதைத்தான் சொல்லி இருக்கிறார். தந்தை பெரியாரும் இதைத்தான் சொன்னார். ஆணும் பெண்ணும் சமம். இங்கே பாருங்கள்! இந்த ஊருக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு மகளிர் ஒன்றிய சேர்மனாகி இருக்கிறார் என்றால் அதுதான் திராவிட மாடல்.
ஊராட்சி, ஒன்றிய தலைவர் பொறுப்புகள் எல்லாவற்றிலும் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் என்றாலே ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி அனைத்திலும் இடம் பெற செய்துள்ளோம்." என்றார்.












Click it and Unblock the Notifications