கள்ளக்குறிச்சியில் அரசு பேருந்தும் காரும் நேருக்குநேர் மோதி கோர விபத்து.. 2 பெண்கள் உட்பட 6 பேர் பலி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் புறவழிச்சாலையில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புறவழிச்சாலையில் சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, ஊட்டிக்குச் சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பிச் சென்று கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கோர விபத்து ஏற்பட்டது.

இதில் காரில் பயணம் செய்த சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த யுவன், ரபேக்கா மற்றும் ஒரு சிறுவன் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
புறவழிச்சாலையோர 8 அடி ஆழ பள்ளத்தில் அரசு பேருந்தின் அடியில் சிக்கிய கார் நொறுங்கியதால் உயிரிழந்தவர்களை மீட்பதற்கு போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் போராடினர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பொக்லைன் இயந்திரம் மூலம் பேருந்தின் அடியில் சிக்கிய காரை மீட்டு காரில் உயிரிழந்த 6 பேரின் சடலங்களையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் நடத்துநர் உட்பட 35 பேர் படுகாயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்து குறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications