முற்றும் மோதல்... மதுபாட்டிலுடன் பாஜக தலைவர்! போட்டோ வெளியிட்டு மாணிக்கம் தாகூர் எம்பி கேள்வி
விருதுநகர்: காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி நைட் கிளப்பில் இருக்கும் வீடியோ, படங்கள் வெளியான நிலையில் பாஜகவினர் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பிரகாஷ் ஜவடேகர் ‛சாம்பெயின்' பாட்டிலுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு ‛இது யார்?' என விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பா நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்தது.
அதிநவீன 6 நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் ‛ப்ராஜெக்ட் 75ஐ’ திட்டத்தில் பிரான்ஸ் விலகல்
இந்நிலையில் தான் பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி நேபாளம் சென்றுள்ள போட்டோ, வீடியாேக்கள் வெளியாகி உள்ளது.
நைட் கிளப்பில் ராகுல்
அதில் ராகுல்காந்தி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நைட் கிளப்பில் உள்ளார். அவர் அருகே பெண் ஒருவரும் உள்ளார். ராகுல்காந்தி தனது ஊடக நண்பரான சும்னிமா உதாஸின் திருமண விழாவில் பங்கேற்றபோது ராகுல் இங்கு சென்றது தெரியவந்தது. இந்த வீடியோவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா விளக்கம் அளித்தார்.
காங்கிரஸ் விளக்கம்
ராகுல் காந்தி தனது நண்பரின் திருமணத்திற்கு தான் காத்மாண்டு சென்றுள்ளார். இது அவரது தனிப்பட்ட பயணம் என்றார். திருமணம், நிச்சயதார்த்த விழாக்களில் பங்கேற்பது இந்தியர்களின் பாரம்பரியம். அது நம் கலாச்சாரம். ஒருவருக்கு நண்பராக இருப்பதோ, அவரது திருமணத்தில் பங்கேற்பதோ என்ன குற்றம் என கேள்வி எழுப்பினார்.
பாஜக விமர்சனம்
இருப்பினும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து ராகுல்காந்தியை விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜகவின் ஐடி விங்க் தலைவர் அமித் மால்வியா காங்கிரஸ் கட்சி வெடிக்கும் நிலையில் உள்ள நிலையில் ராகுல்காந்தி நைட் கிளப்பில் உள்ளார் என விமர்சனம் செய்துள்ளார். மேலும் தமிழக பாஜகவின் பொறுப்பாளர் சிடி ரவி,‛‛ராகுல் சீன பெண்ணுடன் இருப்பது போல் தெரிகிறது. ஏன் அவரது குடும்பம் பெரும்பாலும் சீனர்களுடன் உள்ளது. இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் சேர்ந்து ஏதாவது பெரிய திட்டம் தீட்டுகிறாரா'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகர் எம்பி கேள்வி
இந்நிலையில் தான் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு போட்டோ வெளியிட்டார். அதில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிரகாஷ் ஜவடேகர் ‛சாம்பெயின்' பாட்டிலுடன் உள்ளார். மேலும் இது யார் ? என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார். அதோடு திருமண வரவேற்பில் பங்கேற்பதில் என்ன தவறு உள்ளது? ஏன் வதந்தி பரப்புகிறீர்கள்? ராகுலை கண்டு உங்களுக்கு அச்சம் ஏன்? என பாஜகவை பார்த்து தமிழக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார். இதன்மூலம் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் இடையே மோதல் முற்றி வருவது குறிப்பிடத்தக்கது.