ஈபிஎஸ் ஆதரவாளரான அதிமுக முன்னாள் எம்.பி ராதாகிருஷ்ணன் மறைவு.. அதிர்ச்சியில் தொண்டர்கள்!
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் எம்.பி டி.ராதாகிருஷ்ணன் (67) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் மறைந்த செய்தி அதிமுக வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் விருதுநகர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராதாகிருஷ்ணன். இவர் விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளராக இருந்தவர்.

அதிமுக முன்னாள் எம்.பி
டி. ராதாகிருஷ்ணன் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு பதவிகள் வகித்துள்ளார் ராதாகிருஷ்ணன். விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஈபிஎஸ் ஆதரவாளர்
3 முறை சிவகாசி ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் இருந்துள்ளார் டி.ராதாகிருஷ்ணன். தற்போது, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக இருந்த வந்த டி.ராதாகிருஷ்ணன், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக துணை செயலாளராக பதவி வகித்து வந்தார்.

மாரடைப்பு
இந்நிலையில், டி.ராதாகிருஷ்ணனுக்கு நேற்று (டிசம்பர் 11) பிற்பகலில் வீட்டில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனே சிவகாசி அருகே உள்ள மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அதிமுகவினர் சோகம்
டி.ராதாகிருஷ்ணனுக்கு 1 மகனும், 3 மகள்களும் உள்ளனர். அதிமுக முன்னாள் எம்.பியும், விருதுநகர் மாவட்ட அதிமுகவின் முன்னணி நிர்வாகியுமான ராதாகிருஷ்ணன் மறைவுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சசிகலா இரங்கல்
ராதாகிருஷ்ணன் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மக்களவை முன்னாள் உறுப்பினரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளருமான டி.ராதாகிருஷ்ணன் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.

அனுதாபம்
அன்பு சகோதரர் டி.ராதாகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications