ஸ்டாலின் மிக மிக முக்கியமான தலைவர்.. டோனை மாற்றிய மாணிக்கம் தாகூர்! திமுகவிடம் அடங்கிய காங்கிரஸ்
விருதுநகர்: திமுக - காங்கிரஸ் கூட்டணி குழப்பத்துக்கு முக்கிய காரணமாக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளார். இந்நிலையில் தான் ‛‛தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் ‛இந்தியா' கூட்டணியில் மிக முக்கியமாக அங்கம் வகிக்கக்கூடியவர். எதிர்க்கட்சிகளின் தலைவர்களிலேயே மிக மிக முக்கியமான தலைவர்'' என்று காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் திடீரென்று புகழ்ந்து பேசி இருப்பது கவனம் பெற்றுள்ளது.
காங்கிரஸ் - திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விருதுகர் எம்பியாக இருக்கும் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து திமுகவை சீண்டி வருகிறார்.
இந்நிலையில் தான், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று மாணிக்கம் தாகூர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு மாணிக்கம் தாகூர் பதிலளித்தார். பத்திரிகையாளர் ஒருவர், ‛‛இந்தியா கூட்டணி தலைவராக ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று மணிசங்கர் அய்யர் கூறியுள்ளாரே?'' என்ற கேள்வியை முன்வைத்தார்.

மணிசங்கருக்கு வயதாகிவிட்டது
அதற்கு மாணிக்கம் தாகூர், ‛‛மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் கட்சியிலேயே இல்லை. அவருக்கு வயதாகிவிட்டது. அவரது கருத்தை சீரியஸாக எடுத்து கொள்ள வேண்டாம். லோக்சபா சீட் கேட்டார். காங்கிரஸ் கட்சி கொடுக்கவில்லை.
அதேபோல் ராஜ்யசபா சீட் கேட்டார். அதையும் காங்கிரஸ் கட்சி கொடுக்கவில்லை. இதனால் கேரளாவில் போய் பினராயி விஜயனை முதல்வராக்க வேண்டும் என்று பேசினார். அவர் மாநிலத்துக்கு ஏற்றபடி வெவ்வேறு மாநிலங்களில் பேசுவார்'' என்று கூறினார்.
ஸ்டாலின் பற்றிய கேள்வி
இதையடுத்து பத்திரிகையாளர், ‛‛மணி சங்கர் அய்யர் சொன்ன கருத்தை வைத்து சீமான், ‛இந்தியா' கூட்டணியில் ஸ்டாலின் தான் வலிமையான தலைவர். அவர் இல்லாவிட்டால் ‛இந்தியா' கூட்டணியில் ‛இந்தியா' என்ற பெயர் மட்டும் தான் இருக்கும் என்று சொல்லியுள்ளாரே?'' என்று கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலின் முக்கிய தலைவர்
அதற்கு மாணிக்கம் தாகூர், ‛‛தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் ‛இந்தியா' கூட்டணியில் மிக முக்கியமாக அங்கம் வகிக்கக்கூடியவர். எதிர்க்கட்சிகளின் தலைவர்களிலேயே மிக மிக முக்கியமான தலைவர்'' என்று புகழ்ந்தார். சில நாட்களுக்கு முன்பு தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
அதற்கு மாணிக்கம் தாகூர், அதனை மக்கள் முடிவு செய்வார்கள். 2006ல் ( பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் ஆதரவில் திமுக ஆட்சி அமைத்தது) தவறு செய்துவிட்டோம் என்று பதிலடி கொடுத்து இருந்தார். இப்போது ஸ்டாலின் மிகமிக முக்கியமான தலைவர் என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
சீமான் மீது ‛அட்டாக்’
மேலும் மாணிக்கம் தாகூர், ‛‛அண்ணன் சீமான் ‛இந்தியா' கூட்டணியில் இல்லை. மணி சங்கர் அய்யர் ‛இந்தியா' கூட்டணியில் இல்லை. இது ‛இந்தியா' கூட்டணி சம்பந்தப்பட்டது. இதுபற்றி வெளியே இருப்பவர்கள் கருத்து சொல்வது என்பது வழிபோக்கர்களின் கருத்து மாதிரி. சீமானை பொறுத்தமட்டில் அவர் அவரது கட்சியை காப்பாற்றும் வேலையை செய்ய வேண்டும்.
நாம் தமிழர் கட்சி சுருங்கி கொண்டே செல்வதாக தகவல்கள் வருகிறது. சீமானிடம் வரும் இளைஞர்கள் அதன்பிறகு வெளியேறுகின்றனர்.கடந்த முறை 8 சதவீதம் வரை ஓட்டு வாங்கியிருந்தார். இந்த முறை எவ்வளவு ஓட்டு வாங்குகிறார் என்பதை பார்ப்போம். அதன்பிறகு அவரை பற்றி பேசுவோம்.'' என்றார்.












Click it and Unblock the Notifications