ஓஹோ.. ஸ்டாலினுக்கு பிறகு இவர்தான் முதல்வர்.. "துண்டை போட்ட" அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்!
விருதுநகர்: ‛‛கருணாநிதிக்கு பிறகு முக ஸ்டாலின் முதல் அமைச்சராக பொறுப்பேற்றது போல் அவருக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் முதல் அமைச்சராக பொறுப்பேற்க தயாராக உள்ளார்'' என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறினார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த ஓராண்டில் செய்த சாதனை குறித்து மாவட்டங்கள் தோறும் திமுக சார்பில் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் திமுக அரசின் ஓராண்டு சாதனை பற்றிய விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக முதல்வராக திமுக கட்சியில் கருணாநிதிக்கு பிறகு முக ஸ்டாலின் பொறுப்பேற்றது போல் அவருக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க தயாராக உள்ளார். வாரிசாக இருந்தாலும் முக ஸ்டாலின், உதயநிதி ஆகிய இருவரும் பல்வேறு சிரமங்களை தாண்டி மேலே வந்தவர்கள்.
திமுகவை எதிர்த்து சண்டையிட ஆள் இல்லை. முதலில் அதிமுக ஒன்று சேர்ந்து நம்மை எதிர்க்கட்டும். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கேடுகெட்ட ஆட்சி நடைபெற்றது. அவர்கள் கஜானாவை சுரண்டிவிட்டனர். தற்போது திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலினின் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. நமது முதல்வர் நல்லவர். ஒவ்வொருவர் குடும்பத்திலும் முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடக்கும் ஆட்சி டெல்லிக்கு பயப்படாது. டெல்லிக்கு பயப்படாத தலைமை தான் தமிழகத்தில் உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications