டொனால்ட் டிரம்ப் பற்ற வைத்த ஈரான் எனும் பெருநெருப்பு... எப்படி சமாளிப்பார் ஜோ பிடன்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது பதவி காலத்தில் ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட உக்கிர நடவடிக்கைகளை புதிய அதிபராக பொறுப்பேற்கும் ஜோ பிடன் (ஜோ படைன்) எப்படி கையாளுவார் என்பதை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
டொனால்ட் டிரம்ப் காலத்தில் அமெரிக்காவின் பிரதான எதிரி நாடு என்கிற அந்தஸ்து வகித்ததில் ஈரானும் ஒன்று. அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகல், பொருளாதார தடைகள் ஆகிய அம்சங்கள் டிரம்ப் மேற்கொண்ட முக்கியமானவைகளில் முதன்மையானவை.
டொனால்ட் டிரம்ப் கொடுத்த நெருக்கடிகளை ஈரான் அலட்சியப்படுத்தியே வந்தது. இதன் உச்சமாக அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டியது. டொனால்ட் டிரம்ப்போ பதிலடியாக, ஈரான் ராணுவ ஜெனரல் சுலைமானியை படுகொலை செய்தது.
அப்போது அமெரிக்கா-ஈரான் இடையே யுத்தம் சூழ்நிலை உருவானது. இந்த பதற்றம் டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சியின் இறுதி நாட்கள் வரை தொடருகிறது. அண்மையில் ஈரானின் அணு விஞ்ஞானி மஹ்சன் படுகொலை செய்யப்பட்டார். அமெரிக்காவுக்காக இஸ்ரேல்தான் இந்த படுகொலையை செய்தது என்பது ஈரானின் குற்றச்சாட்டு.
இன்னொரு பக்கம் அரபுநாடுகளையும் இஸ்ரேலையும் தூதரக உறவு கொள்ள வைத்து ஈரானை தனிமைப்படுத்துகிற முயற்சியையும் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக்கி நடைமுறைப்படுத்தினார். இப்போதைய நிலையில் ஈரானில் டொனால்ட் டிரம்ப் பற்ற வைத்திருக்கிறது யுத்தம் என்கிற பெருநெருப்பு.
அதேநேரத்தில் ஒபாமா ஆட்சிக்காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் சுமூகமாக உறவு இருந்தது. ஆகையால் புதிய அதிபராகும் ஜோ பிடன் (ஜோ பைடன்) ஆட்சிக் காலத்தில் டிரம்ப் பற்ற வைத்த நெருப்பு அணைக்கப்படுவதற்கான நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவே எதிர்பார்க்கப்படுகிறது. விடிய காத்திருக்கும் 2021-ம் ஆண்டில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமான உறவு புதிய நம்பிக்கைய விதைக்கும் என்பது எதிர்பார்ப்பு.