இப்படி கூட நடக்குமா.. அப்படியே உறைந்து போன நயாகரா நீர்வீழ்ச்சி! அமெரிக்காவை வதைக்கும் குளிர்
வாஷிங்டன்: வட அமெரிக்கவை கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்புயல் வீசி நிலைகுலைய வைத்துள்ளது. இந்த நிலையில், அங்குள்ள புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியும் பனியின் காரணமாக உறைந்துபோய் உள்ளது. குறிப்பாக நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியில் அருவியில் இருந்து தண்ணீர் கீழே விழாத அளவுக்கு உறைந்துபோயுள்ளது.
ரோஜா படத்தில் புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது என்ற பாடல் மிகவும் பிரபலம்.
இந்த பாடல் காட்சிகளில் திரும்பும் இடங்களில் எல்லாம் பனிப்பிரதேசமாக காட்சியளிக்கும். அதேபோன்ற ஒரு நிலைதான் தற்போது வட அமெரிக்காவில் உள்ளது.
தலைமுறை காணாத கடும் குளிர்.. பனிப்புயலால் உறைந்த அமெரிக்கா..களையிழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
இருளில் மூழ்கும் நிலை
வட அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதாவது ஒரு தலைமுறை காணாத வகையில் வீசும் பனிப்புயலால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர். செவ்வாய் கிரகத்தில் காணப்படும் குளிர்ச்சிக்கு நிகர் என்று சொல்லும் அளவுக்கு மைனஸ் 40 டிகிரி வரை வெப்ப நிலை இருப்பதால் அங்கு குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. வட அமெரிக்காவில் நிலவும் கடும் குளிரால் மின் தடுப்பாடு ஏற்பட்ட பல லட்சக்கணக்கான மக்கள் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.
3 இந்தியர்கள் சாவு
கடுமையான பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல மாகாணங்களும் தவித்து வருகின்றன. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. 60 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். கடுமையான பனி மற்றும் எலும்பை உறைய வைக்கும் குளிரால் எங்கு பார்த்தாலும் பனிப் படலமாகத்தான் காட்சி அளிக்கின்றன வட அமெரிக்க பகுதிகள். அரிசோனா மாகாணத்தில் உள்ள ஒரு ஏரி உறைந்தது. இந்த உறைந்த ஏரியில் விழுந்து 3 இந்தியர்கள் கூட உயிரிழந்த சோக சம்பவம் நேற்று அரங்கேறியது.
நின்று போன நயாகரா நீர் வீழ்ச்சி
இப்படி குளிரின் துயரம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க உலக புகழ்மிக்க நயகரா அருவி இந்தகுளிரால் அப்படியே உறைந்து நின்று விட்டது. ஆம் இது உண்மைதான். செவ்வாய்க்கிழமை இரவு கனடா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாக பாய்ந்தோடி விழுந்து கொண்டிருந்த நயாகரா நீர்வீழ்ச்சி நின்று போனது. ஆம்.. நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி அப்படியே உறைந்துபோய் நின்றுவிட்டது.
ஐஸ் கட்டிகளாக உறைந்தபோன அருவி
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான எல்லையில் ஓடும் நயாகரா நீர்வீழ்ச்சி உலக புகழ்பெற்றதாக உள்ளது. உலகம் முழுவதும் இந்த அருவியை காண லட்சக்கணக்கான மக்கள் வருவதுண்டு. இத்தகைய புகழ்பெற்ற இந்த நயகாரா நீர்வீழ்ச்சிதான் தற்போது அப்படியே ஐஸ் கட்டிகளாக உறைந்து காட்சி தரும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி அப்படியே உறைந்து ஐஸ் கட்டிககளாக இருந்தாலும், உட்புறமாக இந்த அருவி கொட்டிக் கொண்டுதான் இருப்பதாக நயகாரா பார்க்ஸ் இணையதளம் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
ஆபத்தான பயணம்
நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து ஒரு நொடிக்கு 3,160 டன் அளவுக்கு நீர் பாயும் என்று சொல்லப்படுகிறது. குளிர்காலங்களில் நயாகரா நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் பனி உருவாவது அடிக்கடி நடைபெறும் நிகழ்வாகவே சொல்லப்படுகிறது. பனிப்பாலம் போல இது காட்சியளிக்கும். கடந்த 1912 ஆம் ஆண்டு இந்த பனிப் பாலம் மீது நடந்து சென்றபோது பனிக்கட்டிகள் உடைந்து மூன்று பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு இந்த ஆபத்தான பயணத்திற்கு மக்கள் அனுமதி மறுப்பது இல்லை.