அவர் வரலேனா என்ன, நாங்க வர்றோம்... ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்கும் புஷ் தம்பதி
வாஷிங்டன்: ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அவரது மனைவியுடன் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் 6ஆம் தேதி அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், அதிபர் டிரம்பை தோற்கடித்தார்.
இருப்பினும், டிரம்ப் தற்போது வரை தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றுள்ளதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
பதவியேற்பு
இது தொடர்பாக டிரம்ப் தொடர்ந்த வழக்குகளிலும் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்று மாலை எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் ஜோ பைடனை அதிபராகவும், கமலா ஹாரிஸை துணை அதிபராகவும் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கவுள்ளனர். இதையடுத்து அவர்கள் வரும் 20ஆம் தேதி வெள்ளை மாளிகையில் பதவியேற்றுக் கொள்ளவுள்ளனர்.
டிரம்ப் கலந்துகொள்வது சந்தேகம்
பொதுவாக, புதிய அதிபர் பதவியேற்கும் விழாவில் அதற்கு முன் அதிபராக இருந்தவர் பங்கேற்பார், அதுதான் வழக்கம். அமெரிக்காவின் 44ஆவது அதிபராக ஒபாமா பதவியேற்றபோது ஜார்ஜ் புஷ் பங்கேற்றார். அதேபோல, டிரம்ப் பதவியேற்பு விழாவில் ஒபாமா பங்கேற்றிருந்தார். இருப்பினும், தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப், ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் நிச்சயம் பங்கேற்பேன் என்று கூற முடியாது என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
புஷ் பங்கேற்பு
இந்நிலையில், ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அவரது மனைவியுடன் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெறுவதே நமது ஜனநாயகத்தின் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குடியரசு கட்சியிலிருந்து அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தற்போது புஷ் மட்டுமே உயிருடன் உள்ளார். அதிபர் பதவியேற்கும் விழாவில் ஜார்ஜ் புஷ் கலந்துகொள்வது இது எட்டாவது முறையாகும்.
பைடன் ஒரு நல்ல மனிதர்
கடந்த நவம்பர் மாதம் தேர்தல் முடிவுகள் வெளியானபோதே பைடனை, புஷ் பாராட்டியிருந்தார். பைடனை ஒரு நல்ல மனிதர் என்று குறிப்பிட்டிருந்த புஷ், அவர் நாட்டை வழிநடத்தவும் ஒன்றிணைக்கவும் தனது வாய்ப்பை வென்றுள்ளார் என்றார். மேலும், தேர்தல் நியாயமாக நடைபெற்றதாகவும், இதில் அமெரிக்கர்கள் அதிகளவில் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முயற்சி
இருப்பினும், டிரம்ப் ஜோ பைடன் அதிபராவதைத் தடுக்க தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இறுதி முயற்சியாக, துணை அதிபர் மைக் பென்ஸை பயன்படுத்தி ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்ற மாகாணங்களின் எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களை நீக்கவும் அவர் தற்போது முயன்று வருகிறார்.