ஆப்பிரிக்காவில் நூலகம் உருவாக்கும் 2 இந்திய சிறுமிகள்... அமெரிக்காவிலிருந்தபடி அரும்பணி
வாஷிங்டன்: அமெரிக்காவில் தங்கி இருக்கும் இந்தியாவை சேர்ந்த 2 சிறுமிகள் ஆப்பிரிக்காவில் நூலகம் அமைக்க உதவி வருகின்றனர்.
நூலகங்களே கண்டுபிடிப்புகள் மற்றும் யோசனைகளின் பிறப்பிடமாக இருக்கிறது. ஆனால், எல்லோரும் புத்தகங்களுடனே வளரும் வாய்ப்பை பெறுவது கிடையாது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நூலகங்களில் புத்தகங்கள் நிரம்பி வழியும் சூழலில், ஆப்பிரிக்காவில் பல பகுதிகளுக்கு இன்னும் புத்தகங்களே சென்றடையவில்லை. படிப்பதற்கு அவர்களுக்கு புத்தகங்கள் கிடைப்பதில்லை.
சசிகலா புஷ்பா முதல் கராத்தே வரை... கட்சி தாவியவர்களுக்கு பாஜகவில் பதவி - அப்போ பழைய நிர்வாகிகள்?
இந்திய சிறுமிகள்
இதுகுறித்து யாரும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. இருவரை தவிர... அவர்கள் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பள்ளி படிக்கும் சகோதரிகள். பெயர் அபி கீர்த்தனா மற்றும் ஷ்ரிதிகா. தனது பெற்றோர் சரவணக்குமார் மற்றும் செல்வலட்சுமி ஆகியோருடன் அமெரிக்காவில் தங்கி இருக்கும் இவர்கள் தான் இத்தகைய மகத்தான பணியை மேற்கொண்டு இருக்கின்றனர்.
புத்தகங்களை திரட்டும் சிறுமிகள்
அபி 4 ஆம் வகுப்பும், ஷ்ரிதிகா ஒன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர். ஆப்பிரிக்காவில் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில் குழந்தைகள் படிப்பதற்கு புத்தகமின்றி சிரமப்படுவதை அறிந்த இவர்கள் இருவரும் சேர்ந்து அவர்களுக்கு உதவ முடிவெடுத்தனர். அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 40 மைல் சுற்றளவில் இருக்கும் நூலகங்களில் புத்தகங்களை இருவரும் சேகரிக்கத் தொடங்கினார்கள்.
ஓய்வின்றி பணி
இது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்று அறிந்தும் இந்த பணியில் தொய்வின்றி கடந்த 6 மாதங்களாக தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பள்ளி படிப்பிற்கு இடையே கிடைக்கும் ஓய்வு நேரங்களை இதற்காக செலவிட்டு ஓய்வின்றி புத்தகங்களை திரட்டும் பணியில் இந்த குட்டி சகோதரிகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகள்
இதுகுறித்து அவர்களின் தாய் செல்வ லட்சுமி தெரிவிக்கையில், "ஆப்பிரிக்கன் லைப்ரரி பிராஜெக்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கென்யா, மலவி, லெதொசொ, போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா, உகாண்டா உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள பள்ளிகளின் நூலகங்களில் புத்தகங்களே இல்லை என்பதை தெரிவித்தது. இதை அறிந்த என குழந்தைகள் அங்கு நூலகம் அமைக்க உதவி வருகின்றனர்." என்றார்.
சொந்த காசு
1000 முதல் 1200 புத்தகங்களை கொண்டு முழு நூலகத்தையும், 600 புத்தகங்களை கொண்டு பாதி நூலகத்தை உருவாக்கலாம் என்று சிறுமிகளின் தாயார் தெரிவித்துள்ளார். "புத்தகங்களை சேகரிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் தங்களின் சொந்த பணம் ரூ.60,000 வரை எனது குழந்தைகள் செலவழித்து இருக்கின்றனர். 19 புத்தகங்களை கொண்ட ஒரு பெட்டி 10 கிலோ இருக்கும். புத்தகங்களை ஆப்பிரிக்காவுக்கு அனுப்புவதற்கே ரூ.41 ஆயிரம் செலவாகிவிடும்." என்கிறார் சிறுமிகளின் தாய் செல்வலட்சுமி.