கலக்கல்.. மக்கள் முன்னிலையில்.. டிவி நேரலையில்.. இன்று, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஜோ பிடன்
வாஷிங்டன்: பொதுமக்கள் முன்னிலையில் தொலைக்காட்சி சேனல்கள் நேரலை ஒளிபரப்பு செய்ய மாடர்னா தடுப்பூசியை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் செலுத்திக் கொண்டே உள்ளனர்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்பை சந்தித்த நாடு அமெரிக்கா. அந்நாட்டில் இதுவரை 1 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது.
அவசரகால பயன்பாடு
கடந்த 14ம் தேதி முதல் அமெரிக்காவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அந்நாட்டு மக்கள் முன்னிலையில் துணை அதிபரான மைக் பென்ஸ் அவரது மனைவி கரீன் பென்ஸ் ஆகியோர் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மைக் பென்ஸ்க்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வு அமெரிக்க செய்தி தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஜோ பிடன்
இந்த நிலையில் அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பிடன் மற்றும் அவரது மனைவி நேரலையில், இன்று, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். மக்களிடையே அச்சத்தை போக்குவதற்காக இவ்வாறு அதிகாரத்தில் உள்ளவர்களே நேரடியாக வந்து தங்கள் உடலை பரிசோதனைக் கூடமாக மாற்றிக்கொள்வது வரவேற்பை பெற்றுள்ளது.
மாடர்னா தடுப்பூசி ரெடி
இதற்கிடையில், மாடர்னா தயாரித்த கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியும், பல மாகாணங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் அடுத்த சில வாரங்களில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் வினியோகத்தை ஆரம்பித்துவிடும்.
இரு டோஸ்கள் தடுப்பூசி
மாடர்னா தடுப்பூசி மற்றும் ஃபைசர்-பயோஎன்டெக் ஆகிய இரு தடுப்பூசிகளும் பலன் கொடுக்க வேண்டுமானால், இரு டோஸ்கள் போடப்பட வேண்டும். சில வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் தேவைப்படுகிறது. முதல் டோஸ் எந்த நிறுவன தடுப்பூசியால் பெறப்பட்டதோ, அதே நிறுவனத்திடமிருந்துதான் இரண்டாவது டோஸ் பெற வேண்டும். அப்போதுதான் மருந்து சரியாக பலன் கொடுக்கும்.