அமெரிக்காவில் அதிர்ச்சி... தீவிரமான போராட்டம்.. இந்திய தூதரகத்தில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு
வாஷிங்டன் : வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே மகாத்மா காந்தியின் சிலை புதன்கிழமை அடையாளம் தெரியாத கும்பலால் உடைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் அமெரிக்க போலீஸ்காரர் ஒருவர் கறுப்பின மனிதர் ஜார்ஜ் ஃப்ளாய்ட்டை கொன்ற நிலையில், போராட்டங்கள் பரவி உள்ளதால் அடையாளம் தெரியாத கும்பலால் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மே 25 அன்று ஒரு போலீஸ் அதிகாரி கறுப்பினத்தவரை கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தினார். இதில் மூச்சு விட முடியவில்லை என்று கதறியபடியே ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்தார். இது தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் ஜார்ஜ் ஃப்ளாய்ட்க்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் போலீசாரின் அராஜகத்தை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. பல இடங்களில் போலீசாரின் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்காவே போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவத்தை களம் இறக்கப் போவதாக கூறினார். இராணுவ ஹெலிகாப்டர்கள் நாட்டின் தலைநகரான வாஷிங்டன் நகரில் மிக தாழ்வாக பறந்தன. ராணுவ படை பிரிவினர் பல நகரங்களுக்கு சென்றுள்ளனர். அமெரிக்க போலீஸ் அமைப்பில் நிலவும் இனவெறிக்கு எதிராக கோபத்தை மக்கள் வெளிப்படுத்தி வருவதால் ராணுவ படைகள் களம் இறங்கி உள்ளன.
அமெரிக்காவின் 40 நகரங்கள் மற்றும் வாஷிங்டன் ஆகியவற்றில் ஜார்ஜ் மரணத்திற்கு எதிரான இடைவிடாத போராட்டங்களுக்கு மத்தியில் ஊரடங்கு உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே மகாத்மா காந்தியின் சிலை புதன்கிழமை அடையாளம் தெரியாத கும்பலால் உடைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் பூங்கா காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications