"ஒவ்வொரு ஆண்டும் ஒரு தடுப்பூசி.." கொரோனாவுக்கு எதிராக கரெக்டா இருக்கும்.. பைசர் தலைவர் பரபர கருத்து
வாஷிங்டன்: உலகின் பல்வேறு நாடுகளும் பூஸ்டர் டோஸ் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பாக பைசர் நிறுவனத்தின் தலைவர் ஒரு முக்கிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் தான் நம்மைப் பெரும்பாடு படுத்தி வருகிறது. உலகின் அனைத்து நாடுகளும் இதைக் கட்டுப்படுத்த தான் போராடி வருகிறது.
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- 5 நாட்கள் நடத்த முடிவு!
இருப்பினும், இந்த கொரோனா அலை அலையாகத் தாக்குவதால் அதைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஓமிக்ரான் கொரோனா காரணமாக உலக நாடுகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
பூஸ்டர் டோஸ்
தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே உலக நாடுகளின் ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. கொரோனா வேக்சின்களும் போட்டவர்களுக்குத் தீவிர பாதிப்பும் உயிரிழப்புகளும் மிகக் குறைவாகவே ஏற்படுவது தெளிவாகத் தெரிகிறது. இதனால் உலகின் பல நாடுகளும் வேக்சின் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் பூஸ்டர் டோஸ் பணிகளையும் தொடங்கியுள்ளனர்.
உலக நாடுகள்
இருப்பினும், வேக்சின்கள் ஓமிக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா பரவலை பெரும்பாலும் தடுப்பதில்லை. இதனால் அதைத் தடுக்க உலக நாடுகள் வேக்சின் இடைவெளியைக் குறைப்பது பூஸ்டர் டோஸ் உள்ளிட்ட பணிகளில் இறங்கியுள்ளன.ஆனால் தொடர்ந்து உருமாறி வரும் கொரோனாவை தடுக்க 3 டோஸ் வேக்சின் போதாதது என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக இஸ்ரேல் நாட்டில் 4ஆவது டோஸ் போடும் பணிகளைக் கூட தொடங்கியுள்ளது.
பைசர்
இந்தச் சூழலில் பைசர் நிறுவனத்தின் தலைவர் ஆல்பர்ட் போர்லா இது தொடர்பாக முக்கிய தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, கொரோனா வைரசுக்கு எதிராக அடிக்கடி பூஸ்டர் வேக்சின்களை போடுவதைக் காட்டிலும் ஆண்டுதோறும் ஒரு கொரோனா வேக்சின் போட்டுக்கொள்வது சரியானதாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது ஒவ்வொரு நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து பூஸ்டர் டோஸ் கொடுக்கப்பட வேண்டுமா? அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
ஆண்டுக்கு ஒரு தடுப்பூசி
அதற்குப் பதிலளித்த ஆல்பர்ட் போர்லா, "அது நல்லதொரு செயல்முறையாக இருக்காது, இதற்குப் பதிலாக ஆண்டுதோறும் வேக்சின் எடுத்துக் கொள்வது சிறப்பானதாக இருக்கும். அதற்கேற்ப நாங்கள் வேக்சினை கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஆண்டுக்கு ஒரு முறை என்றால் மக்களை எளிதாக ஒப்புக்கொள்ள வைக்கலாம். பொதுச் சுகாதாரத்தை மனதில் வைத்துப் பார்க்கும்போது அது தான் சிறந்த சூழ்நிலையாக இருக்கும். ஓமிக்ரான் உட்பட அனைத்து வகையான உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகச் செயல்படும் வேக்சினை உருவாக்கும் முயற்சியில் நாங்கள் உள்ளோம்" என்றார்.
உலக சுகாதார அமைப்பு
ஓமிக்ரானை எதிர்த்துப் போராடக் கூடிய வகையில் மாற்றம் செய்யப்பட்ட தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரி விண்ணப்பிக்கத் தயாராக உள்ளதாகவும், அதன் உற்பத்தி மார்ச் மாதம் தொடங்கும் என்றும் போர்லா கூறினார். எளிதாகப் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள் பூஸ்டர் டோஸை செலுத்திக் கொள்ளும் போது அவர்களுக்குத் தீவிர பாதிப்பு ஏற்படுவது 90% வரை குறைவதாக அமெரிக்கா நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் 4 ஆபத்தான பட்டியலில் இருப்போருக்கு மட்டும் பூஸ்டர் டோஸ் பேட்டால் போதும் என்றும் முதலில் உலகெங்கும் உள்ளவர்களுக்கு 2 டோஸ் வேக்சினை போடுவதில் தீவிரம் காட்ட வேண்டும் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.