அமெரிக்காவில் எதிரொலிக்கும் பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணம்.. விசாரணை கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம்
வாஷிங்டன்: பாதிரியாா் ஸ்டேன் சுவாமியின் மரணம் குறித்து இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் திருச்சியில் பிறந்தவர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி. சமூக செயற்பாட்டாளரான இவர் ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வந்தார்.
இவர் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் எல்கார் பரிஷத் கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறி 2020 அக்டோபரில் கைது செய்யப்பட்டார்.
84 வயதில் இறந்த ஸ்டேன் சுவாமி
இதையடுத்து அவர் மகாராஷ்டிரா சிறையில் அடைக்கப்பட்டார். 2021 ஜூலை 5ல் தனது 84வது வயதில் இவர் இறந்தார். இவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்ததே இறப்புக்கான காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவரது மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைள் எழுந்தன.
கோரிக்கையை நிராகரித்த இந்தியா
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் அலுவலகம், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதி மற்றும் மனித உரிமைகள் கொள்கை மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான ஜெர்மன் ஆணையர் ஆகியோரும் கவலை தெரிவித்திருந்தனர். ஆனால், பாதிரியாா் ஸ்டேன் சுவாமி சட்டத்தின்படியே நடத்தப்பட்டதாக கூறி சர்வதேச விமர்சனங்களை இந்தியா நிராகரித்தது.
தீர்மானம் அறிமுகம்
இந்நிலையில் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை அமெரிக்காவின் கலிபோர்னியா நாடாளுமன்ற உறுப்பினர் ஜுவான் வர்காஸ் அறிமுகம் செய்தார்.
தீர்மானத்தில் இருப்பது என்ன?
இதுபற்றி அவர் கூறியதாவது, "பாதிரியாா் ஸ்டேன் சுவாமியின் மறைவுக்கு பிறகு இந்த தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மனித உரிமைகளுக்காக வாதிடும் தனிநபர்களை தவறாக நடத்துவதும் சிறையில் அடைப்பதையும் தடுக்க வேண்டும் என்பதை இந்தியா உள்பட பிற நாடுகளுக்கு இந்த தீர்மானம் தெளிவுப்படுத்தும். மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை குறிவைக்க பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்தும் இந்த தீர்மானம் கவலை தெரிவிக்கிறது. தேசத் துரோகச் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் இந்த தீர்மானம் பாராட்டுகிறது'' என்றார்.