37 ஆயிரம் அடி உயரம்.. குறட்டை விட்டு தூங்கிய விமானிகள்.. தரையிறங்காமல் சுற்றிக்கொண்டிருந்ததால் பகீர்!
வாஷிங்டன்: விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து வந்துகொண்டிருந்த நிலையில், அந்த விமானத்தை இயக்கிய விமானிகள் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டு விமானத்தை 25 நிமிடங்கள் தாமதமாக இறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டின் தலைநகர் கர்த்தூம் நகரில் இருந்து எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது.
ஆட்டோ மோட் உள்ளிட்ட வசதிகளை கொண்ட இந்த போயிங் 737- ரக விமானம் தரையிறங்க வேண்டிய அடிஸ் அபாபா நகர் விமான நிலையத்தை நெருங்கியது.

வேகத்தை குறைக்கவில்லை
விமானம் தரையிறங்குவதற்கான சிக்னல்கள் கொடுக்கப்பட்டு விமானம் தரையிறங்குவதற்கான இசைவும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகள் கொடுத்தனர். ஆனால், 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து வந்த விமானத்தில் தரையிறங்குவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. தரையிறங்க வேண்டிய ஓடுபாதையை தாண்டியும் விமானம் வேகம் மற்றும் பறக்கும் உயரத்தை குறைக்கவில்லை.

குறட்டை விட்டு தூங்கிய விமானிகள்
இதையடுத்து பதறிப்போன விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானிகளை பலமுறை தொடர்பு கொண்டனர். ஆனால், அவர்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால், அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த பரபரப்புக்கு முழு காரணமும் விமானிகள் தான். ஏனென்றால் அவர்கள் விமானத்தை ஆட்டோ பைலட் மோடில் வைத்து விட்டு குறட்டை விட்டு தூங்கியுள்ளனர். விமானத்தை இயக்கிக்கொண்டிருக்கும் விமானிகள் தூங்கியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ பைலட் மோட்..
விமானிகள் தூங்கியதால் விமான நிலையம் வந்தாலும் விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் தொடர்ந்து பறந்து கொண்டிருந்து இருக்கிறது. பிறகு தானாக ஆட்டோ பைலட் மோட் துண்டிக்கப்பட்ட பிறகு எச்சரிக்கை அலாரம் ஒலித்து இருக்கிறது. அப்போதுதான் கண் விழித்த விமானிகள், விமானம் இலக்கை தாண்டி சென்று கொண்டிருப்பதை அறிந்து இருக்கிறார்கள். உடனே சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை 25 நிமிடங்கள் தாமதாக அடிஸ் அபாபா விமான நிலையத்தில் தரையிறக்கினர். இதையடுத்து சுமார் இரண்டு அரை மணி நேரம் விமானம் நிறுத்திவைக்கப்பட்டது.

யாருக்கும் பாதிப்பு இல்லை
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விமானமும் பத்திரமாக தரையிறங்கியது. விமானம் கண்காணிப்பு தரவுகளும் விமானம் ரன்வேயை தாண்டி பறந்து சென்றதை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இதேபோன்று ஒரு நிகழ்வு நடைபெற்றது நினைவிருக்கலாம். நியூயார்க்கில் இருந்து ரோம் நகரம் சென்ற விமானம் 38 ஆயிரம் அடி நடு வானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் இரு விமானிகள் தூங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.












Click it and Unblock the Notifications