ஆப்கன் தீவிரவாதிகளின் புகலிடமாக கூடாது- ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்! ரஷ்யா, சீனா புறக்கணிப்பு
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க கூடாது, எந்த ஒரு நாட்டுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
Recommended Video
ஐநா பாதுகாப்பு கவுன்சில் குழுவின் தற்போதைய தலைவராக இந்தியா இருந்து வரும் நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஆப்கனிலிருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறிய நிலையில், ஐ.நா. மூலமாக ஆப்கனுக்கு அழுத்தம் தரும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

எந்த நாடுகள்
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதுபோன்ற ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முன்மொழிந்தன. 13 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்தன. அதே நேரம், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நிரந்தர உறுப்பினர்கள் வாக்களிப்பை புறக்கணித்தன.

புகலிடம் கூடாது
இந்த தீர்மானத்தில், எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்துவதற்காக அல்லது தாக்குதல் நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது, தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்க ராணுவம்
ஆப்கானிஸ்தான் நாடு முழுவதையும் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தாலிபான்கள் கைப்பற்றினர் இதையடுத்து பல நாட்டு மக்களையும் அவரவர் நாடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டு வந்தது.

ஐநா மூலம் உதவி
இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் அமெரிக்க ராணுவத்தின் கடைசி வீரரும் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து கிளம்பி தங்கள் தாயகம் சென்று விட்டார். இந்த புகைப்படத்தை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் வெளியிட்டிருந்தது. அமெரிக்கா வெளியேறி விட்டாலும் மக்களுக்கு தேவையான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக செய்வோம் என்று அந்த நாடு உறுதி அளித்தது. இந்த நிலையில்தான் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications