"போரை தொடங்கியது புதின்.. அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும்.." ரஷ்யா விவகாரத்தில் பைடன் அதிரடி
வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கி உள்ள நிலையில், ரஷ்யா மீது பல்வேறு புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்து உள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது வியாழக்கிழமை ரஷ்யா போர் தொடுத்துள்ளது. போரின் முதல் நாளில் 70க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை அறிவித்துள்ளதாக ரஷ்யா ராணுவம் அறிவித்துள்ளது.
இது உலக நாடுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு வந்த பொருளாதாரத்தை ரஷ்யாவின் இந்த நடவடிக்கை கடுமையாகப் பாதித்துள்ளது.

புதிய பொருளாதாரத் தடைகள்
இதைத் தொடர்ந்து பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் அறிவித்து உள்ளன. இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் பல முக்கிய வங்கிகளின் சொத்துக்கள் முடக்க உத்தரவிட்டுள்ள பைடன், உயர் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்யவும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்

தனித்து விடப்படுவார்
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் உடனடியாகவும் வரும் காலத்திலும் ரஷ்யப் பொருளாதாரத்தின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. ஐரோப்பாவுடன் இணைந்து அமெரிக்கா நிதி அமைப்பை அணுகுவதிலும் ரஷ்ய வங்கிகளுக்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் ரஷ்யாவின் தொழில்நுட்ப இறக்குமதி மிகக் கடுமையாகப் பாதிக்கும். ரஷ்யா அதிபர் புதின் சர்வதேச அரங்கில் தனித்து விடப்படுவார்,

நேட்டோ அமைப்பு
ரஷ்யா சைபர் தாக்குதலைத் தொடுக்கத் திட்டமிட்டால் அதை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக உள்ளோம். நான் ஏற்கனவே திட்டவட்டமாகத் தெரிவித்ததைப் போல, நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளுக்குச் சொந்தமான பகுதிகளைப் பாதுகாக்க அமெரிக்கா முழுப் பலத்துடன் நடவடிக்கை எடுக்கும். இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க நேட்டோ படைகள் இன்று (பிப். 25) அவசர ஆலோசனை நடத்த உள்ளது. உக்ரைன் உக்ரைனில் ரஷ்யாவுடன் எங்கள் படைகள் மோதலில் ஈடுபடாது. இருப்பினும், நட்பு நாடுகளைக் காக்கத் தேவையான நடவடிக்கை எடுப்போம்.

போசும் திட்டம் இல்லை
உக்ரைன் மீது ஏற்கனவே ரஷ்யா போரை ஆரம்பித்துள்ள நிலையில், அதிபர் புதின் உடன் பேசும் திட்டம் எதுவும் இல்லை. அவர் சோவியத் யூனியனை மீண்டும் நிறுவ விரும்புகிறார். அவரது இந்த லட்சியம் உலகின் பிற நாடுகளின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது. சர்வதேச சட்டத்தை மீறி ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல். ரஷ்ய அதிபர் புதின் தான் இந்தப் போரைத் தொடங்கியுள்ளார். இப்போது அவரும் அவரது நாடும் இதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்.

இந்தியா நிலைப்பாடு
ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள இந்த பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவைக் கடுமையாகப் பாதிக்கும். ரஷ்யாவால் இனி டாலர்கள், யூரோக்கள், பவுண்டுகள் மற்றும் யென் ஆகியவற்றை பயன்படுத்தி வணிகம் செய்வது கடினமாக்கியுள்ளோம்" என்றார். இந்த விவகாரத்தில் இந்தியா அமெரிக்காவுடன் உள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த பைடன், "இந்தியாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இதில் முழு தீர்வு எட்டப்படவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications