"வாவ்.. சூப்பர்.." பிரதமர் மோடி சொன்ன ஒற்றை வரி.. பாராட்டி தள்ளிய அமெரிக்கா! கவனிக்கும் உலக நாடுகள்
வாஷிங்டன்: இந்தோனேசியாவில் நடந்த ஜி20 மாநாடு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், அமெரிக்கா இது தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
சர்வதேச அளவில் டாப் 20 பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளே ஜி20 நாடுகள் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஜி20 நாடுகள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெறும்.
உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி20 மாநாட்டில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். இந்தாண்டு இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு நடத்தப்பட்டது.
நேருக்கு நேர்.. கனடா பிரதமர் ஜஸ்ட்டினிடம் கோபத்தை கொப்பளித்த ஜி ஜின்பிங்.. ஜி20 மாநாட்டில் ஷாக்
ஜி20 மாநாடு
இந்தோனேசியாவில் பாலி நகரில் நடந்த இந்த ஜி20 நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பல விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உக்ரைன் போர் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த உச்ச மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி வாயிலாகக் கலந்து கொண்டார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் நேரடியாகவே கலந்து கொண்டனர். இந்த ஜி20 கூட்டத்தை அடுத்தாண்டு இந்தியா தலைமையேற்க உள்ளது. "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற கருப்பொருளில் இந்தியா தலைமை இருக்கும் என்றும் இந்த நூற்றாண்டு போருக்கானது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா பாராட்டு
இதனிடையே ஜி20 விவகாரத்தில் பிரதமர் மோடியையும் இந்தியாவையும் அமெரிக்கா வெகுவாக பாராட்டி உள்ளது. ஜி-20 உச்சி மாநாட்டின் பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்தியா முக்கிய பங்காற்றியது என்று வெள்ளை மாளிகை பாராட்டியது. மேலும், இந்த நூற்றாண்டு போரினுடையதாக இருக்கக் கூடாது என்று கூறியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்கா பாராட்டியது.
ரொம்பவே முக்கியம்
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், "உச்சி மாநாட்டில் முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்தியா இன்றியமையாத பங்கு வகித்தது. இன்றைய நூற்றாண்டு போராக இருக்கக்கூடாது என்பதைப் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார். மேலும், இந்த ஜி20 மாநாட்டில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
நல்ல முடிவுகள்
தற்போதைய சூழலில் உணவு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து உள்ளோம். அதே நேரம் இங்கு இருக்கும் பல்வேறு சிக்கல்களைக் களையக்கூடிய ஒரு சர்வதேச பொருளாதாரத்தை உருவாக்கும் முயற்சியையும் நாங்கள் தொடர்கிறோம். வரும் நாட்களில் இதில் நல்ல முடிவுகள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவின் பங்கு
இந்த கூட்டத்தில் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. அடுத்தாண்டு ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமையேற்க உள்ளது. இந்தியாவின் தலைமையை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம். இந்தியாவில் அடுத்து நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். இந்த உச்சி மாநாட்டில் மோடி மற்றும் இந்தோனேசிய அதிபருடன் அதிபர் பைடன் பேச்சுவார்த்தை நடத்தினார்" என்றார்.
சுவாரசியம்
முன்னதாக ஜி20 மாநாடு தொடங்குவதற்கு முன்பு ஒரு சுவாரசிய நிகழ்வு ஒன்று நடந்தது. அதாவது மாநாடு தொடங்குவதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தேடி வந்தார். நரேந்திர மோடியைத் தேடி வந்த பைடன் அவரிடம் கை கொடுத்து உரையாடினார். இதை பின்னால் இருந்த வெளியுறவுத் துறை ஜெய்சங்கர் சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார்.
ரசித்த மோடி
அப்போது பிரதமர் மோடி அவரிடம் ஏதோ சொல்ல, அதைக் கேட்டு ரசிக்கும் அமெரிக்க அதிபர் பைடன் சிரித்துக் கொண்டே பிரதமர் மோடியைத் தட்டிக் கொடுக்கிறார். அதேபோல மாநாடு முடிந்த பின்னர் கிளம்பும்போதும், பிரதமர் மோடி பைடன் இடையே சுவாரசிய சந்திப்பு ஒன்று நடந்தது குறிப்பிடத்தக்கது.