இந்தியாவை தவிர்க்க முடியாத கூட்டாளியாகவே பார்க்கிறோம்: வெள்ளை மாளிகை ஓபன் டாக்..
வாஷிங்டன்: இந்தியாவை தவிர்க்க முடியாத கூட்டாளியாகவே பார்க்கிறோம் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த விவகாரத்தில் அமெரிக்கா உள்பட ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக நிற்கின்றன.
ஆனால், இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் முரண்பட்ட இந்தியா, தனது நலன் சார்ந்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல்
ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா, அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியது. ஆனால், அதை பொருட்படுத்தாத இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. அதேபோல், ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களின் மீது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது. இந்தியாவின் இந்த துணிச்சலான, நாட்டின் நலன் சார்ந்த முடிவுகளை குறிப்பிட்டு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானில் இந்த மாதிரி துணிச்சல் முடிவு எடுக்க தைரியமில்லை என அந்நாட்டு அரசுக்கு எதிராக பேசியிருந்தார்.

தவிர்க்க முடியாத கூட்டாளி இந்தியா
இப்படி உக்ரைன்- ரஷ்யா மோதல் விவகாரத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் தங்கள் சொந்த நலன்களை பின்பற்றி வரும் நிலையில், இந்தியாவை தவிர்க்க முடியாத கூட்டாளியாக பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரைன் ஜீன்-பியர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, அவர் கூறியதாவது:- இந்தியாவை நாங்கள் தவிர்க்க முடியாத கூட்டாளியாகவே பார்க்கிறோம். அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவு இந்தோ- பசிபிக் பிராந்தியத்திற்கான முன்னேற்றத்திற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டின் அடித்தளமாக உள்ளது.

ஒருங்கிணைந்து செயல்படுவோம்
இருநாட்டு மக்களின் பாதுகாப்பு, அமைதி, செழுமை ஆகியவற்றை பாதுக்காகவும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணவும் நாங்கள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவோம்" என்றார். உக்ரைன் விவகாரம் பற்றிய பேசிய அவர், ''உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் டாலர்கள் நிதி உதவியை அறிவித்துள்ளோம். உக்ரைன் மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காக தொடர்ந்து போரிட இந்த உதவி அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் மட்டும் அல்ல.. எங்களின் நட்பு நாடுகளும் உதவி அளித்து வருகின்றன.

நீங்கள் பார்க்க போகிறீர்கள்
ஜோ பைடனின் தலைமை காரணமாக நேட்டோ நாடுகளும் ஒருங்கிணைந்து உதவி அளித்து வருகின்றன. நேட்டோவில் கூடுதலாக இரு நாடுகள் இணைத்துக்கொள்ளப்பட்டு நேட்டோ கூட்டமைப்பு விரிவுபடுத்தப்பட உள்ளதை நீங்கள் பார்க்க போகிறீர்கள். இது மேற்கத்திய நாடுகளின் வலிமையை பறைசாற்றுவதாக உள்ளது. உக்ரைனுக்கு ஆதரவு அளிக்க நாங்கள் ஒருங்கிணைந்து வந்துள்ளோம். ஒரு நாடு தனது இறையாண்மையை பாதுகாக்கவும், சுதந்திரத்தை பேணவும் போராடினால் நாங்கள் ஆதரவுக்கு நிற்போம் என்பதை உறுதி செய்வது அவசியமானது" என்றார்.












Click it and Unblock the Notifications