90s கிட்ஸுக்கு வந்த அடுத்த சோதனை! உங்களுக்கு தான் கேன்சர் வர வாய்ப்பு அதிகமாம்.. இது வேறயா
வாஷிங்டன்: மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கேன்சர் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக பகீர் ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.
மனிதர்களைத் தாக்கும் மிக மோசமான நோய்களில் ஒன்றாக கேன்சர் உள்ளது. இதுவரை சில வகையான கேன்சர்களுக்கு மட்டுமே நாம் தீர்வை கண்டுபிடித்து உள்ளோம்.
இன்னுமே கூட பல வகையான கேன்சர் பாதிப்புகளுக்கு எந்தவொரு சிகிச்சை முறையும் இல்லை. கேன்சர் பாதிப்பு குறித்தும் அதற்கான சிகிச்சை குறித்தும் உலகெங்கும் ஆய்வுகள் நடந்து வருகிறது.
புதிய ஆய்வு
முன்பெல்லாம் கேன்சர் பாதிப்பு என்பது அரிய நோயாகவே இருந்தது. யாராவது ஒரு சிலருக்கு மட்டுமே கேன்சர் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால், இப்போது நிலைமை அப்படியே மாறிவிட்டது. மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கேன்சர் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதனிடையே 1990களுக்கு பின் பிறந்தவர்களுக்கு கேன்சர் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
90's கிட்ஸ்
நேச்சர் ரிவியூஸ் கிளினிக்கல் ஆன்காலஜி என்ற இதழில் இது தொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் 1990க்குப் பிறகு பிறந்தவர்கள் 50 வயதை அடையும் முன்னரே அவர்களுக்கு கேன்சர் உருவாக வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டு உள்ளது. அதாவது முந்தைய தலைமுறை நபர்களுடன் ஒப்பிடுகையில் 90களுக்கு பின் பிறந்தவர்களுக்கு கேன்சர் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டு உள்ளது.
கேன்சர் காரணிகள்
சிறு வயதில் நாம் செய்யும் விஷயங்கள் பிற்காலத்தில் கேன்சர் ஏற்படக் காரணமாக மாறுவதாகக் கூறப்பட்டு உள்ளது. அதேநேரம் சிறு வயதில் பின்பற்றும் எந்த முறை கேன்சர் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து முழு தகவல்கள் இல்லை. இருப்பினும் உணவு, வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. உடல் பருமன் சிறு வயதுக் குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் நிலையில், அதுவும் கேன்சர் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
புகை பிடிப்பது
இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சில அரிய வகை கேன்சர் பாதிப்புகளை நம்மால் தடுக்க முடியாது என்றாலும் கூட பல கேன்சர் பாதிப்புகளை நம்மால் எளிதாகத் தடுக்க முடியும். நாம் வாழ்க்கை முறையில் செய்யும் சிறு மாற்றங்கள் கூட கேன்சர் பாதிப்பைப் பெரியளவுக்குக் குறைக்கும். முதல் விஷயம் புகை பிடிக்க கூடாது. புகை பிடிப்பது நுரையீரல் புற்றுநோய் மட்டுமின்றி வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் உட்பட 14 வகையான கேன்சர் ஏற்படவும் காரணமாக உள்ளது.
முதல் விஷயம் இது தான்
அரசு எடுத்துள்ள பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையால் இப்போது புகை பிடிக்கும் பழக்கம் குறைந்து உள்ளது. இருந்தாலும் கூட இப்போதும் புகை பிடிக்கும் 10 பேரில் 9 பேர் 25 வயதுக்குள் அதைப் பழகியவர்களாகவே உள்ளனர். எனவே, கேன்சர் வரக் கூடாது என்றால் முதலில் நீங்கள் தூரத்தில் தள்ளி வைக்க வேண்டியது புகைபிடிப்பைத் தான். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் உடனே விட்டுவிடுவது நல்லது.
பாலியல் உறவு
HPV (மனித பாப்பிலோமா வைரஸ்) என்பது பிறப்புறுப்பு பகுதிகளில் மருக்களை ஏற்படுத்தும். பாலியல் உறவு மூலமே இது மிக வேகமாகப் பரவும். கருப்பை வாய், ஆண்குறி, வாய் மற்றும் தொண்டை எனப் பல வகை கேன்சர்களை இது ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இளைஞர்கள் மத்தியில் இந்த வகை கேன்சர் அதிகரித்து வருகிறது. HPVக்கு எதிராகத் தடுப்பூசி எடுத்துக் கொள்வதும் பாதுகாப்பான உடலுறவு வைத்துக் கொள்வதும் இதற்கான தீர்வாகும். மேலும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல் பருமன்
உடல் பருமன் என்பது குடல், மார்பகம், கருப்பை மற்றும் கணையம் உட்பட 13 வகை கேன்சர் ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது. அதிகப்படியான கொழுப்பு என்பது கேன்சர் வளர ஊக்குவிக்கிறது. கேன்சர் செல்கள் எளிதாகப் பிரியவும் இது உதவுகிறது. கொழுப்பு செல்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை உற்பத்தி செய்வதால் மார்பகம் மற்றும் கருப்பையில் கேன்சர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மோசமான உணவு முறையே உடல் பருமனுக்கு முக்கிய காரணம். எனவே அதிலும் கவனம் தேவை!
மது
அடுத்து நீங்கள் மதுக் குடிக்கும் நபராக இருந்தால் அதைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதிகப்படியான மது குடிப்பது சில குறிப்பிட்ட வகை கேன்சர் ஏற்படுத்தும். கடந்த சில ஆண்டுகளில் தோல் புற்றுநோயும் அதிகம் ஏற்படுகிறது. புற ஊதா கதிர்வீச்சு அதிகம் நம்மைப் பாதிப்பதே இதற்குக் காரணம். எனவே, வெயில் காலத்தில் இதற்குத் தக்க பாதுகாப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.