உலகமே தடுமாறுகிறது.. ஜஸ்ட் ஒரே வாரத்தில் பலி எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு.. ரொம்ப கஷ்டம்
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய இறப்பு எண்ணிக்கை வெறும், 8 நாட்களில் 50,000லிருந்து 1 லட்சமாக இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதில், இத்தாலி அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது (18,849), அதைத் தொடர்ந்து அமெரிக்கா (18, 586), ஸ்பெயின் (15,970) மற்றும் பிரான்ஸ் (12,228) போன்ற நாடுகள், கொரோனா கோரப்பிடியில் அதிகம் பேரை பலி கொடுத்துள்ளன.
Recommended Video
இந்தியாவில் இதுவரை 239 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில், இதற்கிடையில், மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 16,50,000 ஐ தாண்டியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து, 210 க்கும் மேற்பட்ட நாடுகளும் பிராந்தியங்களும் தங்கள் எல்லைகளுக்குள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளன.
அமெரிக்காவை சீரழித்த கொரோனா.. 24 மணி நேரத்தில் 2000 பேரை பலி கொடுத்த முதல் நாடாக மாறிய கொடுமை
அதிர்ச்சி
எட்டு நாட்களுக்கு முன்னர் உலகளாவிய மொத்த எண்ணிக்கையை விட தற்போது கொரோனா இறப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50,000 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக உறுதிசெய்யப்பட்டதோடு, 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கத்திய நாடுகள்
இந்த காலகட்டத்தில், ஐரோப்பாவிலும், மேற்கத்திய நாடுகளிலும், நோய் எண்ணிக்கை மற்றும் இறப்புகளில் அதிக ஏற்றம் காணப்படுகிறது. கடந்த 8 நாட்களில் அமெரிக்கா 10,000 புதிய இறப்புகளை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட 28,000 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன.
குறைவாக இருக்கும்
அரசுகள் கொடுக்கும் டேட்டாவை கண்காணிக்கும் Johns Hopkins இன் ஆராய்ச்சியாளர்களால் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கைதான் இது. யதார்த்தத்தை விட இது குறைவாக இருக்கலாம். போதிய சோதனை வசதிகள் இல்லாத நாடுகளும், வைரஸின் தாக்கத்தை குறைத்து மதிப்பிடுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட அரசுகளும் நிறையவே இருக்கின்றன.
மோசமாகும்
பல நாடுகள் தங்கள் மருத்துவமனைகளுக்குள் நடந்த இறப்புகளை மட்டுமே கணக்கிட்டுள்ளன, வீடுகளில் அல்லது பராமரிப்பு வசதிகளில் இறந்தவர்களை கணக்கில் எடுப்பதில்லை. இதுபோன்ற ஆபத்து அதிகரிப்புக்கு இடையே, வீட்டிலேயே தங்குவதற்கான கட்டுப்பாடுகளை முன்கூட்டியே நீக்குவது "கொடிய மீள் எழுச்சிக்கு" வழிவகுக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை அதிகாரி எச்சரித்திருந்தார்.
தளர்த்த கூடாது
WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் இதுபற்றி கூறுகையில், சில நாடுகள் வீட்டிலேயே மக்கள் இருப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளன. கட்டுப்பாடுகளை மிக விரைவாக நீக்குவது ஒரு ஆபத்தான எழுச்சிக்கு வழிவகுக்கும். கொரோனா பிரச்சினை, சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால், ஆபத்தானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.