இறுதி ஊர்வலத்தில் 18 பேர் பலி... கடும் பனியால் மோதிய லாரி.. மேற்கு வங்கத்தில் சோகம்.
நாடியா: மேற்கு வங்க மாநிலத்தில் அதிவேகமாக சென்ற லாரி ஒன்று இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது மோதியதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிவேகத்தில் வந்த லாரி கடும் பனிமூட்டம் காரணமாகவும், போதிய வெளிச்சம் இல்லாதாலும் கார் மீது மோதி விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.
விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மயானத்தை நோக்கி
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்திற்குட்பட்ட புல்பாரி பகுதியில் மயானம் உள்ளது. நேற்று முன்தினம் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாக்தா பகுதியில் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய சனிக்கிழமை ஏற்பாடுகள் நடைபெற்றது. பின்னர் அவர் உடல் இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. வழியெங்கும் ஏராளமான உறவினர்கள் சாலையெங்கும் பூக்களைத் தூவி சோகத்துடன் சென்றுகொண்டிருந்தனர்.

லாரி பயங்கரமாக மோதியது
இறுதி ஊர்வல வாகனம் புல்பாரி பகுதியில் உள்ள மயானம் நோக்கிச் சென்றது. சில நிமிடங்களில் இறுதி ஊர்வல வாகனம் மயானத்திற்குள் நுழைய வேண்டிய சூழ்நிலையில், அப்பகுதியில் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேகமாக வந்தது. சற்றும் எதிர்பாராமல் அந்த லாரி இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்றவர்கள் மீது பயங்கரமாக மோதியது. அது மட்டுமின்றி இறந்தவர் உடல் வைக்கப்பட்டுள்ள இறுதி ஊர்வல வாகனம் மீதும் மோதி நின்றது.

18 பேர் உயிரிழந்தனர்
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேர் உடல் நசுங்கி பலியாகினர். பலர் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடினர். சம்பவ இடத்தில் கூடிய பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த ஹன்ஸ்காலி காவல்நிலைய போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 5 பேரை ஆம்புலன்ஸ் மூலம் சக்திநகர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.

கவர்னர் கவலை
இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கார், லாரி மோதி இறுதி ஊர்வலத்தில் சென்றவர்களில் 18 பேர் விபத்தில் உயிரிந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், கடும் பனிமூட்டம் நிலவுவதால் அதி வேகமாக வந்த லாரி போதிய வெளிச்சமின்றி விபத்து ஏற்படுத்தியிருக்கலாம் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications