இந்தப் பிரதமர் எங்களுக்கு வேண்டாம்... கனடியர்கள் அதிரடி கருத்து!
இதுதொடர்பாக ஒட்டாவைவைச் சேர்ந்த அபாகஸ் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், 49 சதவீதம் பேர் ஹார்ப்பரின் ஆட்சி சரியில்லை என்று தெரிவித்துள்ளனர். 34 சதவீதம் பேர் மட்டுமே இந்த ஆட்சி சரியாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து அபாகஸ் நிறுவன தலைமை செயலதிகாரி டேவிட் கொலேட்டோ கூறுகையில், இது நிச்சயம் பிரதமருக்கு நல்ல செய்தியில்லை. அவருக்கும், அவரது ஆட்சிக்கும் மக்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது.எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலுவிழந்த நிலையில் இருப்பது மட்டுமே அவருக்கு சாதகமானதாக இருக்கிறது.
ஹார்ப்பரையும், அவரது ஆட்சியையும் வெறுப்பதாக கூறியுள்ள மக்கள் அவருக்கு மாற்றாக யாரையும் தெரிவிக்கவில்லை என்றார்.
மொத்தம் 1008 பேரிடம் ஜூன் 20 முதல் 23 வரை கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. டோரி மற்றும் என்டிபி ஆகிய இரு கட்சிகளும் தலா 35 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளன. லிபரல் கட்சிக்கு 20 சதவீத ஆதரவும் மக்களிடையே காணப்பட்டது.
தலைவர்களைப் பொறுத்தவரை என்டிபி தலைவர் தாமஸ் முல்கேருக்கு 31 சதவீத ஆதரவு காணப்பட்டது. அதேசமயம், 45 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை. 24 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
டோரி கட்சிக்கு அடுத்தபடியாக இந்தக் கட்சிக்கே மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாக கூறப்படுகிறது. எனவே ஆளும்கட்சியான டோரிக்கு இக்கட்சி வரும் தேர்தலில் பெரும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.