சபரிமலை ஐயப்பனை காண குவியும் பக்தர்கள்.. தரிசன நேரத்தில் இன்று முதல் மாற்றம் - முழு விபரம்
சபரிமலை: லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருவதால் எங்கும் சரண கோஷம் எதிரொலிக்கிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தரிசன நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மண்டல பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதன் 6-வது நாளான நேற்று தந்திரி ராஜீவரு மற்றும் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தலைமையில் சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகளில் ஒன்றான களப பூஜை, களபம் சார்த்தல், களப அபிஷேகம் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 6 நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது.
வேலையை உடனே ஆரம்பிக்கனும்.. அதிமுக மாசெக்களை ரெடியாக்கும் எடப்பாடி பழனிசாமி! இது தான் 'அந்த’ ப்ளானா?
பக்தர்களுக்கு சிகிச்சை
இதனிடையே, சன்னிதானம் அருகே பதினெட்டு படி ஏறி வரும்போது பக்தர்களுக்கு மூச்சு திணறல், நெஞ்சுவலி போன்ற திடீர் உடல் நலகுறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அவசர சிகிச்சை மையமும், கட்டுப்பாடு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் நியமிக்கப்பட்டுள்ளனனர்.
அவசர சிகிச்சை மையங்கள்
தேவசம்போர்டு மற்றும் கேரளா அரசு பம்பா முதல் சன்னிதானம் வரை 19 இடங்களில் அவசர மருத்துவ சிகிச்சை மையங்களை அமைத்துள்ளது. அதேபோல் பாரம்பரிய வன பாதையில் பல்வேறு இடங்களில் வனத்துறை உதவியுடன் கல்லிடாம் குன்று, கரியிலாம் தோடு உட்பட பல்வேறு இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைந்துள்ளன.
மலை ஏறும் பக்தர்கள்
பம்பையில் இருந்து மலை ஏறும்போது நீலிமலை, அப்பாச்சிமேடு போன்ற கடினமான செங்குத்தாக உள்ள மலை ஏறும்போது ஐயப்ப பக்தர்களுக்கு மூச்சு திணறல், நெஞ்சுவலி ஏற்பட்டால் அலட்சியமாக நினைக்காமல் உடனடியாக இந்த மையங்களில் இருந்து மருத்துவ உதவியை நாடவேண்டும் எனவும், எனவே மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறவேண்டும் எனவும் கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கேட்டு கொண்டுள்ளார்.
ஓய்வெடுக்க வசதிகள்
அதேபோல் பாரம்பரிய வன பாதையிலும் வனத்துறையின் உதவியுடன், கல்லிடாம் குன்று, கரியிலாம் தோடு, உட்பட பல இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் செயல்படுவதாகவும் தெரிவித்தார். பக்தர்களுக்கு நடந்து செல்ல சிரமம் ஏற்பட்டால் செயற்கை முறையில் ஆக்சிஜன் சுவாசிக்கவும், ஓய்வு எடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
24 மணி நேர அவசர சிகிச்சை
மாரடைப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க பயிற்சி பெற்ற சுகாதார துறை ஊழியர்கள் இந்த மையங்களில் 24 மணி நேரமும் பணிபுரியும். பல்வேறு மொழிகளில் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் பக்தர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் சுகாதார துறை மற்றும் தேவசம் சார்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தரிசன நேரத்தில் மாற்றம்
இந்நிலையில், பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், இன்று முதல் சாமி தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணிநேரம் அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாலை நேரத்தில் 4 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், இன்று முதல் மாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் எதிரொலிக்கும் சரண கோஷம்
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் குறைந்த அளவிலான பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வருகின்றனர். யாத்திரையாக வரும் பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என எழுப்பும் பக்தி முழக்கம் சபரிமலை எங்கும் எதிரொலிக்கிறது.